வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லையே!- ஆர்.நல்லக்கண்ணு
திருச்சி: நாட்டில் சுயநலம் பெருகிவிட்டது. யாரும் பொதுநலநோக்கத்தோடு செயல்படுவதில்லை. இதுதான் இன்றைய சீரழிவுகளுக்குக் காரணம். எதிர்கால தலைமுறையினர் வாழ்க்கை கேள்விக்குறியதாகிவிட்டது, என்றார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர் நல்லக்கண்ணு.
திருச்சியில் இலவச திருமண விழா மற்றும் ஏழை மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட கல்வி உதவி தொகை வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:
"சமூக நலத் தொண்டர்கள் மக்கள் தேவையை சமூக கடமையாற்ற வேண்டும். முன்பெல்லாம் கல்வி நிறுவனங்கள் ஆரம்பித்து ஏழை எளியோருக்கு கல்வியை வழங்கினார்கள். ஆனால் தற்போது கல்வி வியாபாரம் ஆகி விட்டது.
நமக்கு தேவையான அனைத்து வாழ்வாதாரங்களையும் இயற்கை வழங்கி உள்ளது. ஆனால் சுயநல நோக்கோடு தனக்கு என்று கொள்ளையடித்து செல்வதால் வருங்கால தலைமுறையினருக்கு வாழ வழி இல்லாமல் போய்விட்டது.
நாட்டில் மனித உணர்வு குறைந்து போனதால்தான் அன்னா ஹசாரே போன்றவர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது.
சுதந்திரத்துக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் விலை ரூ.100 இருந்தது. 130 கிலோ கொண்ட நெல் விலை ரூ.100 இருந்தது. இப்போது 130 கிலோ கொண்ட நெல் விலை ரூ.1,300 ஆக உள்ளது. ஆனால் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.16 ஆயிரத்து 88 ஆக உயர்ந்து உள்ளது. இதனை சாதாரணமானவர்களால் வாங்க முடியுமா?.
தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து இருப்பதே வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்க காரணம். ஒரு முறை கொள்ளையடித்தால் சில காலம் கவலையின்றி வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆன்லைன் வர்த்தகம், தனி பேரத்தால்தான் விலை உயர்வு ஏற்படுவதாக சொல்கிறார்கள். வசதி படைத்தவர்கள் மேலும் வசதி படைத்தவர்கள் ஆகிறார்கள்.
ஏழைகள் சாதாரண தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறார்கள். ஆகையால் சில வள்ளல் குணம் படைத்தவர்கள் இது போன்ற இலவச திருமணங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்வது காலத்தின் தேவை. மக்களின் மீது அக்கறை படுகிறவர்கள் இருப்பதால் தான் மனித நீரோட்டம் இன்னும் இருக்கிறது," என்றார்.