மதுரை பொறியியல் மாணவி கொலையில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
மதுரை: மதுரையில் பொறியியல் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளத் தொடர்பால் இந்தக் கொலை நடந்துள்ளது.
மதுரை வில்லாபுரம் சொக்கலிங்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்த மாயாண்டி திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களது மகள்கள் கயல்விழி (19), சித்திரைச் செல்வி (18). சித்திரைச் செல்வி என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இந் நிலையில் லதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை முத்துராமலிங்கத்தின் மனைவி நாகஜோதி கண்டித்துள்ளார். இருந்தாலும் லதா- முத்துராமலிங்கம் தொடர்பு நீடித்தது.
இந் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை லதாவின் வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்மக் கும்பல், லதா மற்றும் அவரது மகள்கள் கயல்விழி, சித்திரைச் செல்வி ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிவிட்டது. இதில் சித்திரைச் செல்வி அதே இடத்தில் பலியானார்.
லதாவும் கயல்விழியும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் முத்துராமலிங்கத்தின் மனைவி நாகஜோதிதான் கூலிப்படை வைத்து இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பது தெரியவந்தது. ஆனால், நாகஜோதி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரைப் பிடிக்க ஒரு தனிப் படையும் கூலிபடையினரைப் பிடிக்க ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி மதுரையில் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த நாகஜோதியை கைது செய்தனர். அவரது கணவர் முத்துராமலிங்கம், நாகஜோதியின் தங்கை விஜயராணி, இவரது கணவர் காமராஜ், மகன் வழிவிட்டான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.