இந்த ஆண்டும் பருவமழை போதுமான அளவு பெய்யும்-வானிலை ஆய்வு மையம்

ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவ மழை தொடங்கும் என்றும், செப்டம்பர் வரை இந்த மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சல் மற்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அஜீத் தியாகி ஆகியோர் இந்த விவரங்களை வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த ஆண்டு மழை அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை.
எனினும் வட கிழக்கு மற்றும் வட மேற்குப் பகுதிகளில் பருவமழை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பிற பகுதிகளில் சராசரியான அளவுக்கு மழை பெய்யும்.
ஒட்டுமொத்தத்தில் நீண்ட கால சராசரி மழை அளவான 98 சதவீதம் அளவுக்கு நாடு முழுவதுமே இந்த பருவ காலத்தில் மழை பெய்யும். நீண்ட கால சராசரி மழை அளவு என்பது கடந்த 50 ஆண்டு கால மழையின் சராசரி அளவாகும். இது இப்போது 89 செ.மீ. என்ற அளவில் உள்ளது. இந்த 89 செ.மீ. என்ற அளவில் 96 முதல் 104 சதவீதம் வரையில் மழை அளவு பதிவானால் இயல்பான மழை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு நாட்டில் பருவமழை நன்கு பொழிந்ததை அடுத்து சாதனை அளவாக 23.58 கோடி டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு எல் நினோ (El Nino) என்ற வானிலை மாற்றம் காரணமா மழை குறைந்து வறட்சி ஏற்பட்டது. 2010ம் ஆண்டில் அதன் எதிர் நிலையான லா நினா (La Nina) என்ற வானிலை நிலவியது. இதனால் அளவுக்கு அதிகமாகவே மழை பெய்தது.
ஏப்ரல் மத்திய வாரத்தில் லா நினாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் தாக்கம் மிக மிக அதிகமாகக் குறைந்தால் அது எல் நினோவாக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட நிலையில் மழை அளவு குறையலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. பூமியின் வட பகுதியில் அதிகமான பனிப் பொழிவு ஆரம்பித்துள்ளதால் வெப்ப நிலை பெருமளவு அதிகரிக்க வாய்ப்பில்லை.
இதனால் இந்த ஆண்டு கோடையில் கூட நாட்டின் வட பகுதிகளில் அதிகளவில் வெப்பத்தின் தாக்கம் இல்லை என்றனர்.












Click it and Unblock the Notifications