திருமணம்..மோசடி: மத்திய பிரதேச பெண் தந்தையுடன் கைது
திருச்சி: திருமணம் செய்து கொண்டு கணவரை ஏமாற்றி, அவரது ரூ. 5 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற மத்தியப் பிரேதச பெண்ணையும் அவரது தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் கூட்டுறவு நகரை சேர்ந்த காந்திலாலின் மகன் விஜய்குமார் (30) பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த இவருக்கு பெண் பார்க்க சென்னையை சேர்ந்த புரோக்கர்கள் சுகன்ராஜ் மற்றும் விஜயராஜ் ஆகியோரை காந்திலால் அணுகினார்.
அவர்களது ஏற்பாட்டின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரது மகள் பூஜாகுமாரி என்பவருக்கும் விஜயகுமாருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி துறையூரில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த சில நாட்களில் ராஜேஷ்குமார் ஜெயின் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி விஜய்குமாரிடம் ரூ.5 லட்சம் கடனாக பெற்றார். மேலும் பூஜாகுமாரியையும் ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றுவிட்டார்.
ஊருக்கு சென்று நீண்ட நாட்கள் ஆகியும் மனைவி திரும்பி வராததால் விஜயகுமார் பிகானீர் சென்று விசாரித்த போது பூஜாகுமாரி கொடுத்த முகவரி பொய் என்பதும், அந்த முகவரியில் பூஜாகுமாரி, ராஜேஷ் என்ற பெயரில் யாருமே இல்லை என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தனக்கு பெண் பார்த்து கொடுத்த புரோக்கர்களிடம் பூஜாகுமாரியின் உண்மையான முகவரியை கேட்ட போது, ரூ.2 லட்சம் தந்தால் பூஜாகுமாரியின் முகவரியை தருவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து திருமணம் என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதை விஜய்குமார் உணர்ந்தார். இது குறித்து துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்த மோசடி கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் தனது பெயரில் வழக்கு பதிவாகியிருப்பதையோ, தங்களை போலீசார் தேடி வருவதையோ அறியாத பூஜாகுமாரி தனது தந்தை ராஜேஷ்குமாருடன் கணவர் விஜய்குமாரை சந்திக்க மீண்டும் துறையூர் வந்தார்.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது உண்மையான பெயர் பூஜா விஸ்வகர்மா என்றும், தந்தையின் பெயர் ராஜேஷ் விஸ்வகர்மா என்றும் தெரியவந்தது.
பூஜாகுமாரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது தந்தை டிரைவர் வேலை செய்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு பணிக்கு செல்ல முடியாமல் வருமானத்திற்கு வழி இன்றி இருந்தோம். இதையடுத்து சென்னையில் உள்ள புரோக்கர்கள் சுகன்ராஜ் மற்றும் விஜயராஜ் ஆகியோரை அணுகி குடும்ப சூழ்நிலையை எடுத்துக்கூறி எனக்கு திருமணம் செய்து அதன் மூலம் வரும் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம்.
அதன்மூலம் காந்திலாலின் மகனை திருமணம் செய்து கொண்டேன். அடுத்த 15 நாட்களில் ரூ. 5 லட்சம் பணத்தையும் வாங்கிக் கொண்டு தப்பிவிட்டோம்.
அந்தப் பணம் செலவழிந்து விட்டதால் மீண்டும் விஜயகுமாரிடமே சென்று எனது உடல்நிலை சரியில்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சமாதானம் கூறிக் கொள்ளலாம் என்று நினைத்து திரும்பி வந்தோம். அப்போது என்னையும் தந்தையையும் போலீசார் கைது செய்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரையும் போலீசார் துறையூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இது போன்ற பல மோசடித் திருமணங்களை நடத்தி வைத்து தலைமறைவாக உள்ள சென்னையை சேர்ந்த புரோக்கர்கள் சுகன்ராஜ், விஜயராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.