ஈஸ்டர் பண்டிகை: முதல்வர் கருணாநிதி வாழ்த்து!

புரட்சிக்காரர் என்றும், அரசனுக்கு எதிராக சதி செய்கிறார் என்றும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறைந்தனர். அந்த நாள் புனித வெள்ளியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கடுத்த மூன்று நாள்களில் இயேசு உயிர்த்தெழுந்து மக்களுக்குக் காட்சி தந்தார்.
இந்த நாளை துன்பம் நீங்கிய புனிதத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள் உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகைக்கு முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
இன்னல் நீங்கி இன்பம் கண்ட நன்னாளாகக் கிறிஸ்தவ சமுதாய மக்கள் கொண்டாடும், ஈஸ்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (24.4.2011) மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. அன்பையும், அருளையும் போதித்த இயேசு பெருமான் பகைவர் தமக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த இரக்கத்துடனும், கருணையுடனும் தொண்டுகள் புரிந்தார்.
தமது போதனைகளாலும், செயல்களாலும் சமுதாயத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு உதவிடவேண்டும் என்னும் உணர்வை அனைவரிடமும் வளர்த்தார்.
உங்கள் மேல் உடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக் கொள்ளப்பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள், உங்களிடம் கேட்கும் எவர்க்கும் கொடுங்கள், உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடம் இருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள், திரும்பக் கிடைக்குமென எதிர் பார்க்காமல் கடன் கொடுங்கள் எனப் போதித்தார்.
ஒரு முறை, நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஒருவர் இயேசுநாதரை விருந்துக்கு அழைத்தபொழுது அவரிடம், நீர், பகல் உணவோ, இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, அண்டை வீட்டார்களையோ அழைக்க வேண்டாம், மாறாக நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் உறுப்புகள் குறைந்தோரையும், பார்வையற்றோரையும் அழையும் என்று அறிவுறுத்தினார்.
இப்படி, ஏழை எளிய நலிந்த பிரிவினரின் நலனுக்காகப் பாடுபட்டுத் துன்பங்களைச் சகித்துக் கொண்டு, தொண்டு செய்திடும் மனப்பான்மையை சமுதாயத்தில் வளர்வதற்குத் தம் செயல்கள் மூலமாகவே வழிகாட்டியவர் இயேசு பெருமான்.
அவரது புகழ் பாடும் பெருநாள் இந்த ஈஸ்டர் திருநாள். இந்நன்னாளில் அவர் போதித்த வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடித்து வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
-இவ்வாறு தனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி உள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications