முழுமையான குற்றப்பத்திரிகை நகலை சிபிஐ தரவில்லை: ராசா புகார்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தனக்கு குற்றப்பத்திரிகையின் முழுமையான நகல் தரப்படவில்லை என்று புகார் கூறியுள்ளார். இதையடுத்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை முழுமையாக வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக ராசா தவிர யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் சாஹித் உஸ்மான் பால்வா ஆகியோரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்களை அவர்களுக்கு முழுமையாக வழங்குமாறு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராசா உள்ளிட்ட மூவருக்கும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை முழுமையாக வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி அளித்தது.
மேலும், அவர்கள் மூவரின் சிறைக் காவலும் ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ள 2வது துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications