வரத்து அதிகரித்தும் குறையாத தேங்காய் விலை!!
தென்காசி: நெல்லை மாவட்டத்தில் தேங்காய் வரத்து அதிகரித்தும் விலை குறையாமல் அதே நிலையே நீடிக்கிறது.
சமையலுக்கும், தலைமுடிக்கும் அத்தியவாசியமானது தேங்காய். ஒருவருடத்துக்கு முன் ரூ.10க்கு விற்பனையான ஒரு கிலோ தேங்காய் அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.20 ஆக விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு கோடை காலத்தில் போதிய மழை பெய்யாததால் தேங்காய் மகசூல் வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக தேங்காய் விலை இரட்டிப்பானது. தற்போது மகசூல் அதிகரித்துள்ளது. ஆனால் விலை மட்டும் குறையவில்லை.
பாவூர்சத்திரம் பகுதியிலும் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்தும் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. ஒரு கிலோ தேங்காய் ரூ.17லிருந்து ரூ.18 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கிருந்து பாளையங்கோட்டை மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வரத்து அதிகரித்தாலும் விற்பனை அமோகமாக இருப்பதால் விலை குறையாமல் அதே நிலை நீடிக்கிறது. மேலும் காங்கேயம், வெள்ளக்கோயில் ஆகிய பகுதியில் கொப்பறை தேங்காய் ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுவதால் தேங்காய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. இளநீர் விற்பனையும் சூடு பிடித்துள்ளதால் பல தோப்புகளில் இளநீர் மட்டுமே வெட்டப்படுகிறது. இதுவும் தேங்காய் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications