கோவிலுக்குப் போக சதாப்தி ரயில் வழியில் நிறுத்திய பாஜக தலைவர்-விசாரணை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சதாப்தி ரயிலில் பயணம் செய்த பாஜக தலைவரான விஜய் கோயல், தான் இறங்குவதற்காக அந்த ரயிலை அறிவிக்கப்படாத ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தினார். இது குறித்து ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியிலிருந்து ஆஜ்மீர் செல்லும் சதாப்தி ரயில் ராஜஸ்தான் மாநிலத்தின் தெளசா மாவட்டத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பாஜக முன்னாள் எம்.பியான விஜய் கோயல் பயணம் செய்தார்.
அவர் அந்த மாவட்டத்தில் உள்ள அனுமார் கோவிலுக்குச் செல்வதற்காக பந்திகுயி ரயில் நிலையத்தில் இறங்க விரும்பினார். இதையடுத்து ரயிலின் கார்டிடம் சென்ற அவரது எடுபிடிகள் ரயிலை அங்கு நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து அந்த ரயில் பந்திகுயி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. கோயலின் வருகையை எதிர்பார்த்து அந்த ரயில் நிலையத்துக்கு முன்பே வந்து காத்திருந்த பாஜக தொண்டர்கள், அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கோயலுக்காக அந்த ரயில் அதிகாரப்பூர்வமில்லாமல் சுமார் 3 நிமிடங்கள் அங்கு நின்று பின்னர் புறப்பட்டுச் சென்றது.
இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 2 மூத்த அதிகாரிகள் குழு விசாரணையை நடத்தி வருகிறது. கோயல் டிக்கெட் வாங்கினாரா என்பது உள்பட இந்த விவகாரத்தின் முழு விஷயங்களையும் இந்தக் குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழு தனது அறிக்கையை திங்கள்கிழமைக்குள் சமர்ப்பிக்கவுள்ளது.
இந் நிலையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்று வருகிறார் கோயல்.












Click it and Unblock the Notifications