ஐ.நா. அறிக்கையை வெளியிடவிடாமல் இந்தியா தடுப்பதாக சந்தேகம்: தொ. பரமசிவம்
நெல்லை: இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.சபையின் அறிக்கையை வெளியிடவிடாமல் தடுக்க இந்தியா துணைபோவதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பேராசிரியர் தொ. பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது,
இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு. எனவே மத்திய அரசு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இலங்கை தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா. தயார் செய்துள்ள அறிக்கையை வெளியிட கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று இலங்கை காலில் விழுந்து கெஞ்சுகிறது. ஆனால் இலங்கையின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துவிட்டது. இலங்கை தமிழர்கள் படுகொலை குறித்த அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த அறிக்கையை வெளியிடாமல் தடுக்க இந்தியாவும் துணை போகின்றதோ என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும். ஐ.நா. அறிக்கையை உடனடியாக வெளியிடவேண்டும். இது தான் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பில் இன்று (ஏப்ரல் 24 ) பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன், இலங்கை தமிழர் பகுதிக்கு நேரடியாக சென்று வந்த வழக்கறிஞர் கயல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சேவியர், மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நிஜாம், வக்கீல் பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications