காரில் கடத்தப்பட்ட பெண்-மோட்டார் சைக்கிள்களில் 40 கி.மீ. விரட்டி பிடித்த மக்கள்
சிவகங்கை: மதுரை அருகே கீழவளவில் காரில் இளம்பெண்ணை கடத்திச் சென்ற கும்பலை 100க்கும் அதிகமானோர் ஏராளமான மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்ற பொது மக்கள் மடக்கிப் பிடித்து பெண்ணை மீட்டனர்.
மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள உறங்கான்பட்டியை சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் காய்கறி வாங்குவதற்காக சந்தைக்கு சென்றார். அப்போது, அந்த வழியே காரில் வந்த 4 பேர் அந்தப் பெண்ணை காரில் இழுத்துப் போட்டுக் கொண்டு தப்பினர்.
இந்த சம்பவத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 100 பேர் மோட்டார் சைக்கிள்களில் காரை விரட்டிச் சென்றனர். மேலும் கீழவளவு, சிவகங்கை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
அந்தக் கார் கல்லாராகினிபட்டி என்ற இடத்தில் குறுக்கே வந்த ஆடுகள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. சுமார் 40 கிமீ தூரம் விரட்டப்பட்ட நிலையில் அந்த கார் சிவகங்கை நகருக்குள் நுழைந்தது.
தங்களுக்குக் கிடைத்த தகவலால் உஷாரான சிவகங்கை நகர போலீசார் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே அந்தக் காரை மடக்கினர். அதில் வந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சிவகங்கையை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்த பாலுச்சாமி ( 27), ஒக்கூரை சேர்ந்த முருகன் (27), பாலகிருஷ்ணன் (27) என்பதும், காரை ஓட்டி வந்தது ஆனந்தன் (32) என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications