பின்லேடன் பிடிபட்டாலோ, கொல்லப்பட்டாலோ, அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவோம்-அல் கொய்தா
இதுகுறித்து அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஐரோப்பாவில் நாங்கள் ஒரு அணுகுண்டை மறைத்து வைத்துள்ளோம். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலோ அல்லது பிடிக்கப்பட்டாலோ, உடனடியாக அந்த குண்டை வெடிக்கச் செய்வோம் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளம் இதுதொடர்பான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. கியூபாவின் குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள கொடுங்கோல் சித்திரவதைச் சிறை தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பல பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்றில், அல் கொய்தாவின் இந்த எச்சரிக்கை செய்தியும் இடம் பெற்றுள்ளது.
இந்த ரகசிய ஆவணங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய செய்தி நிறுவனங்கள் சிலவற்றுக்கு விக்கிலீக்ஸ் கொடுத்துள்ளது. அந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ள முக்கியத் தகவல்கள் விவரம் வருமாறு:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரவாத தாக்குதலை அல் கொய்தா தொடுத்த சமயத்தில், கராச்சி நகரில் முக்கிய அல் கொய்தா தலைவர்கள் ஒரே இடத்தில் குவிந்து அந்த தாக்குதலைக் பார்த்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு தி்ட்டமிட்ட முக்கிய்த தலைவர் விமானங்கள் இரட்டைக் கோபுரத்தை தாக்கி சிதைத்த காட்சிகளை நேரடியாக பார்த்து ரசித்தார். கராச்சியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மிக மிக பாதுகாப்பான முறையில் இவர்கள் அந்தக் காட்சிகளை டிவி ஒளிபரப்பின் மூலம் பார்த்துள்ளனர்.
இந்த வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில்தான், ஏமன் நாட்டில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். கோல் கப்பல் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளில் முக்கியமான நபர், டான்சில் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நியூயார்க் நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஒரு சில நாட்களில் அத்தனை அல் கொய்தா தலைவர்களும் ஆப்கானிஸ்தானுக்கு ஓடி விட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்திற்கு முக்கியக் காரணமான பின்லேடனும், அவனது துணைத் தளபதியான அய்மான் அல் ஜவாஹிரியும் சம்பவத்தன்று கராச்சியில் இருந்தது இந்த ஆவணம் மூலம் தெரிய வருவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பின்னர், நான்கு நாட்கள் கழித்து காந்தஹாருக்கு பின்லேடன் போயுள்ளார். அங்கு அல் கொய்தா தீவிரவாதிகள் கூடியுள்ளனர். அப்போது, ஆப்கானிஸ்தானை நாசகார அமெரிக்க கும்பலிடமிருந்து காப்போம் என்று உறுதி மொழி எடுத்துள்ளனர்.
மேலும் இந்தக் கூட்டத்தின்போது அல் கொய்தா அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை தலிபான் அமைப்பின் உயர் பீடமான சுரா கவுன்சிலுக்கு மாற்றியுள்ளான் பின் லேடன். அமெரிக்கப் படைகளிடம் தான் சிக்கலாம் அல்லது கொல்லப்படலாம் என்பதை யூகித்தே இந்த முடிவுக்கு லேடன் வந்ததாக தெரிகிறது.