வாயில் பீரை ஊற்றி வலுக்கட்டாயமாக மாணவி கற்பழிப்பு-3 பேர் கைது
புதுச்சேரி: 16 வயது மாணவியின் வாயில் பீரை ஊற்றி அவரை கட்டாயப்படுத்தி கற்பழித்த கொடுமை புதுவையில் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், தர்மாபுரி பகுதியைச் சேர்ந்தவர் கலா. 16 வயதான இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். கலாவின் தந்தை தனியாக வசித்து வருகிறார்.
கலாவுடன், கார்த்தி என்பவர் நெருக்கமாக பழகி வந்தார். இவர் டிரைவராக இருக்கிறார். கடந்த 11ம் தேதி கலா கம்ப்யூட்டர் பயிற்சிக்காக போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தி, தனது தாயார் கலாவைப் பார்க்க விரும்புவதாக கூறி வீட்டுக்கு அழைத்தார்.
இதையடுத்து கலாவும், கார்த்தியுடன் அவரது வீட்டுக்குச் சென்றார். ஆனால் அங்கு கார்த்தியின் நண்பர்களான முத்து, அன்பரசன் ஆகியோர்தான் இருந்தனர். கார்த்தியின் தாயார் இல்லை. முத்து கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இதனால் குழம்பினார் கலா. இந்த நிலையில், திடீரென கலாவைப் பிடித்துக் கொண்ட 3 பேரும் அவரது வாயில் பீரை ஊற்றினர். பின்னர் அவரைக் கட்டாயப்படுத்திக் கற்பழித்து விட்டனர். இதை செல்போனில் படமும் எடுத்தனர்.
அதிர்ச்சி அடைந்த கலா நடந்ததை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தார். பெரும் வேதனையில் மூழ்கினார். சோகமமாக காணப்பட்டார். ஆனால் கார்த்தியோ, செல்போனில் கற்பழிப்பை படம் எடுத்ததைக் காட்டிக் காட்டி தனது இச்சைக்குப் பணியுமாறு மிரட்ட ஆரம்பித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலா, தனது தாயாரிடம் இதுகுறித்துக் கூறினார். பெரும் அதிர்ச்சி அடைந்த அவர் மேட்டுப்பாளையம் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரைப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி கார்த்தி உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications