நெல்லையில் 7 துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு
நெல்லை: நெல்லையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாலிபர் உடல் சாக்கில் கட்டப்பட்டு கிணற்றில் மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு,
நெல்லை தச்சநல்லூரை அடுத்த பால்கட்டளை கிராமத்து வயல் பகுதியில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றில் இருந்து நேற்று காலை துர் நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்றவர்கள் உள்ளே எட்டிப் பார்த்தனர். உள்ளே ஒரு சாக்கு மூட்டை மிதந்தது. இது குறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கயிறு கட்டி அந்த சாக்கு மூட்டையை மேலே கொண்டு வந்தனர். அதை அவிழ்த்துப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தது தெரிய வந்தது.
அவரது தலை தனியாகவும், இரண்டு கைகள் தனியாகவும், வயிற்றுப்பகுதி, இரண்டு கால்கள் தனியாகவும் என மொத்தம் 7 துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டைக்குள் அடைத்து அதனுடன் கல்லையும் சேர்த்து கட்டி கிணற்றில் போட்டுள்ளனர். இந்த கொடூர கொலை நடந்து 3 நாட்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் உடல் அழுகிய நிலையில் தூர்நாற்றம் வீசியது. முகம் அடையாளம் தெரியாதபடி அழுகி சிதைந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட வாலிபரின் சட்டைப் பையில் 2 ரூ. 500 நோட்டுகள் மட்டும் இருந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது கிணறு மற்றும் நெடுஞ்சாலை பகுதியை சுற்றி சுற்றி வந்தது. இதனால் கொலை வெளியூரில் செய்து பிணத்தை காரில் எடுத்து வந்து கிணற்றில் வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications