2ஜி: மன்மோகன் சிங்குக்கு ஒன்னும் தெரியாதா?, அவரையும் சாட்சியாக சேருங்கள்- பால்வா

பால்வாவை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது நடந்த விசாரணையின்போது ஆஜரான பால்வாவின் வழக்கறிஞர்கள் மஜீத் மேனன், விஜய் அகர்வால் ஆகியோர் வாதாடினர்.
அவர்கள் கூறுகையில், இந்த வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் ஒரு சாட்சியாக சிபிஐ சேர்க்க வேண்டும். ஏனெனில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பிரதமருக்குத் தெரிவித்துள்ளார். அதுபோல் பிரதமரும் அதற்குப் பதில் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இதை சிபிஐயே தனது முதல் குற்றப்பத்திரிகையில் ஒரு ஆதாரமாக சேர்த்துள்ளது. எனவேதான் பிரதமரையும் சாட்சியாகச் சேர்க்க வேண்டும் .
பிரதமருக்கு, ராசா தவறான தகவலைத் தெரிவித்திருப்பதாக சிபிஐ கூறுகிறது. அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால், இதை சிபிஐ சொல்லக் கூடாது. அதைச் சொல்ல வேண்டியது பிரதமர் தான். என்னை ராசா தவராக வழி நடத்திவிட்டார் என்று நீதிமன்றத்தில் வந்து பிரதமர் சொல்லட்டுமே.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பால்வா தூக்கு தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படும் குற்றச்சாட்டைச் செய்துவிடவில்லை. பால்வாவுக்கு ஜாமீன் வழங்கினால் இந்த நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையை ஏற்றுக் கொள்வார் என்றனர் வழக்கறிஞர்கள்.
இதையடுத்துப் பேசிய சிபிஐ வழக்கறிஞர் ஏ.கே.சிங் கூறுகையில், பால்வாவின் ஜாமீன் மனு மீது பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார்.
இதையடுத்து விசாரணையை நீதிபதி ஓ.பி. சைனி மே 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications