மோடி மீது புகார் கூறிய ஐபிஎஸ் அதிகாரியின் பாதுகாப்பு வாபஸ்

கோத்ரா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டியுள்ளார் அப்போது உளவுப் பிரிவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்.
அந்த ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் பட் கூறியுள்ளார்.
மேலும், "நான் உள்பட 8 போலீஸ் அதிகாரிகள் மோடியின் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது மோடி, மதக் கலவரத்தில் நடுநிலைமை காப்பது அவசியம் என்றாலும், இந்த முறை நிலைமை அப்படியில்லை. இனி இப்படியொரு கலவரம் நடக்கக் கூடாது எனும் வகையில் முஸ்லீம்களுக்கு கட்டாயம் பாடம் கற்றுத் தரவேண்டும். இந்துக்கள் மிகுந்த கோபத்திலும் ஆத்திரத்திலும் உள்ளனர். அந்த ஆத்திரத்துக்கு வடிகால் அவசியம் என்றார்.
நான் இதை கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு படையிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார் பட்.
இப்போது விடுமுறையில் உள்ள பட், தனது ஜூனாகத் நகரில் உள்ள தனது குடும்பத்துக்கு தரப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கும் குடும்பத்துக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு தரப்பட வேண்டும் என மாநில உளவுப் பிரிவு பரிந்துரைத்துள்ளது. ஆனால், என் குடும்பத்துக்குத் தரப்பட்டு வந்த பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக நேற்று மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
என்னை என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியும். என் குடும்பத்தின் பாதுகாப்போடு அரசு விளையாடுவது தான் கவலை தருகிறது என்றார்.
''பெஸ்ட் பேக்கரி வழக்கில் பொய் சொல்ல வற்புறுத்தப்பட்டேன்'':
சமூக ஆர்வலர் தீஸ்த்தா செதல்வாடின் தூண்டுதலின் பேரில் பொய் சாட்சி சொன்னதாக பெஸ்ட் பேக்கரி வழக்கில் அரசு தரப்பின் ஒரே சாட்சியான யாஸ்மின் பானு திடீரென பல்டி அடித்துள்ளார்.
குஜராத்தில் 2002ல் நடந்த பெஸ்ட் பேக்கரி எரிப்பு வழக்கில் 9 பேருக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அவர்களுடைய மேல்முறையீடு மனுக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந் நிலையில் இந்த வழக்கில் முக்கிய அரசு சாட்சியான ஷேக் யாஸ்மின் பானு, திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தீஸ்த்தா செதல்வாட் எனக்கு தவறான அறிவுரைகளைக் கூறி பெஸ்ட் பேக்கரி வழக்கில் பொய் வாக்குமூலம் அளிக்கும்படி செய்து விட்டார்.
கடந்த ஆண்டு ஜூனில் மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நான் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் எல்லா விவரங்களையும் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
யாஸ்மினின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து செதல்வாட் கூறுகையில், 'வழக்கு முடிந்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. இந் நிலையில், யாஸ்மின் ஏன் இப்படி திடீரென அறிக்கை விட்டார் என்று தெரியவில்லை. அவருடைய அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்றார்.
பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஷேக் குடும்பத்தில் அரசுக்கு ஆதரவாக சாட்சி சொன்னவர் யாஸ்மின் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications