அமெரிக்காவில் சூறாவளிக்கு 305 பேர் பலி: 1,700 பேர் காயம்
டஸ்கலூசா: அமெரிக்காவின் தெற்கு பகுதியில் வீசிய மிக பயங்கரமான சூறாவளிக்கு இதுவரை 305 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 1974ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி ஏற்பட்ட கடும் சூறாவளிக்கு 310 பேர் பலியாகினர். அதன் பிறகு தற்போது தான் மோசமான சூறாவளி வீசியுள்ளது. இதனால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சூறாவளியில் சிக்கி அலபாமா ஆளுநரின் சொந்த ஊரான டஸ்கலூசா முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அலபாமா, அர்கன்சாஸ், ஜார்ஜியா, இலினாய்ஸ், கெண்டுகி, மிசிசிப்பி, மிஸூரி, ஓக்லஹோமா பகுதிகள் இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளன.
அலபாமாவில் மட்டும் 204 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்து 700 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் 300க்கும் அதிகமான சூறாவளிகள் இப்பகுதிகளை தாக்கியுள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் 130 சூறாவளிகள் வீசியுள்ளன.
இந்நிலையில் இன்றும், நாளையும் இப்பகுதிகளில் கடுமையான புயல்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அமெரிக்க வானிலை மைய நிலையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications