தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு நீக்கப்படுவது நிச்சயம்-எஸ்.வி.சேகர்
காரைக்குடி: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு நிச்சயம் நீக்கப்படுவார். அதில் சந்தேகம் இல்லை. தேர்தல் முடிவுக்குப் பின்னர் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்றும் நடிகரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.வி.சேகர். ஆனால் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். இருந்தாலும் எம்.எல்.ஏ. பதவியிலிரும் விடாமல் நீடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தனக்கு மயிலாப்பூர் தொகுதி தரப்படும் என நம்பியிருந்தார் சேகர். ஆனால் படு கில்லாடியாக செயல்பட்டு தானே அங்கு வேட்பாளராக போட்டியிட்டார் தங்கபாலு. இதனால் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்பட அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். இதை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக அத்தனை பேரையும் கூண்டோடு நீக்கி மேலும் அதிர்ச்சியூட்டினார் தங்கபாலு.
இவரது மகன் அஸ்வின் சேகருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதற்கான அழைப்பிதழை மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கொடுப்பதற்காக காரைக்குடிக்கு வந்தார் எஸ்.வி.சேகர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நடந்த முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இந்த தேர்தல் எதிர்ப்பலைகள் இல்லாத தேர்தல். அரசு நலத்திட்டங்கள் மக்களிடம் பரவலாக சென்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு உள்ள ஒரு மாத இடைவெளி வேட்பாளர்கள் தங்களது மனதை பக்குவப்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் 63 தொகுதிகளை போராடி பெற்றனர். ஆனால் தங்கபாலு வேட்பாளர்கள் தேர்வு மூலம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை அழித்து விட்டார். தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் உண்மை விசுவாசிகள் 19 பேரை நீக்கம் செய்து அறிவித்தார்.
தற்போது இடைநீக்கம் என்று கூறுகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி.
அரசியல் வியாபாரம் அல்ல. அரசியல் மூலம் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளை அதிகப்படுத்த விரும்பினேன். எதிராளிகளை சம்பாதிக்க அல்ல. சமூக சேவையில் ஈடுபட அரசியல் பதவி பயன்பட்டது. மயிலாப்பூர் தொகுதியில் ரூ.330 கோடி செலவில் அரசின் நலத்திட்டங்களை செய்துள்ளேன்.
இதில் ஒரு பைசா கூட கமிஷனாக பெறவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை கொடுக்க உள்ளேன் என்றார் எஸ்.வி.சேகர்.












Click it and Unblock the Notifications