ஈரோட்டில் ரூ.7 கோடி சுருட்டிய மோசடி நிறுவனம்: உரிமையாளர்கள் தலைமறைவு
ஈரோடு: ஈரோட்டில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நடத்தி முதலீட்டாளர்களின் பணம் ரூ.7 கோடியை குளோபல் டிரேடர்ஸ் எனும் நிறுவனம் சுருட்டியது.
மஹாராஷ்டிரா நிறுவனம்
மஹாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் ராம்நகர் பவான்சூட் பகுதியில் ஆல்வின் டிரேடர்ஸ் அன்ட் டெக்ஸ்டைல்ஸ் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர் சஞ்சய்ராம். இந்நிறுவனத்தின் கிளை குளோபல் டிரேடர்ஸ் எனும் பெயரில் ஈரோடு ஆசிரியர் காலனியில் செயல்பட்டு வருகிறது. இதனை சென்னிமலை ஈஸ்வரமூர்த்தி மற்றும் சென்னை ராமதாஸ் ரெட்டி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
மல்டிலெவல் மார்க்கெட்டிங்
மல்டிலெவல் மார்க்கெட்டிங் மூலம் தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு முதலீடு செய்த தொகையில் 10 சதவீதம் மாதாமாதம் வழங்கப்படும். 60 மாதங்களுக்கு இத்தொகை வழங்கப்படும். 61-வது மாதம் முதலில் செலுத்திய மொத்த தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் மயங்கிய பொது மக்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்திருந்தனர்.
மோசடி
முதலீடு செய்தவர்களுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு 10 சதவீத பணம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் தொகை வருவது நின்று விட்டது. முதலீடு செய்தவர்கள் அலுவலகத்தை தேடி வந்தபோது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. ஈஸ்வரமூர்த்தி மற்றும் ராமதாஸ் ரெட்டி ஆகியோரின் செல்போன் எண்களும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த முதலீட்டாளர்கள் ஈரோடு எஸ்.பி. ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார்கள்.
ஏமாற்றியது எப்படி?
நாங்கள் மகராஷ்டிராவில் லெதர் பிசினஸ் செய்கிறோம். நல்ல லாபத்தில் இயங்கும் அத்தொழிலில் 300 சதவீதம் லாபம் கிடைக்கிறது. உங்கள் பணத்தையும் அத்தொழிலில் தான் முதலீடு செய்ய இருக்கிறோம். அந்த லாபத்திலிருந்து தான் உங்களுக்கு 10 சதவீதம் கொடுக்கிறோம் என்று கூறியே முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளார்கள். மொத்தம் ரூ.7 கோடி வரை மோசடி நடந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications