பின்லேடன் மறைவால் ஆதரவாளர்கள் சோகம்-யு.எஸ்.ஸுக்கு சாபம்
வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மறைவுச் செய்தி அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சிலர் நம்ப முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அல் கொய்தா அமைப்பின் அதிகாரப்பூர்வ மீடியா பிரிவான அஸ் சஹாப் (As Sahab) இதுவரை பின்லேடன் மறைவு குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், அனா முஸ்லீம் (I Am Muslim), என்ற அல் கொய்தா ஆதரவு இணையதளத்தில், பின்லேடன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனா முஸ்லீம் இணையதளத்தில் ஒருவர் எழுதுகையில், இந்த சோகம் மிகவும் ஆழமானது. எங்களது பிள்ளைகளை விட எங்களுக்கு முக்கியமானவர் பின்லேடன். அல்லா, அவரது ஆத்மாவுக்கு ஓய்வளிக்கட்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அஸ் சஹாப் இணையதளத்தில் பின்லேடன் மறைவு குறித்து எந்தத் தகவலும் இல்லாததால், அல் கொய்தா ஆதரவாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
அஸ் சஹாப் அமைதி காப்பதால் இறந்தது பின்லேடன் அல்ல என்று அனா முஸ்லீமில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த செய்தியை நம்பாதீர்கள். இது மேற்கத்திய மீடியாக்களின் கற்பனைச் செய்தி. அல் கொய்தா அறிவிக்கும் வரை அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
இன்னொருவர் கூறுகையில், இறுதி வரை போராடியுள்ளார் பின்லேடன். மரணத்தை சந்தித்தபோதும் கூட அவர் எதிரிகளை தாக்கியுள்ளார். எனவே அவர் கெளரவமான மரணத்தையே தழுவியுள்ளார் என்றார்.
அமெரிக்கர்களின் கொண்டாட்டத்தை சாடியுள்ள ஒருவர், அமெரிக்க பன்றிகள் ஆடிப் பாடி மகிழ்ந்து கொண்டுள்ளனர் என்று சாடியுள்ளார்.
இன்னும் சிலர், இன்னொரு சிங்கம், பின்லேடனின் இடத்தை விரைவில் நிரப்பும். நாங்கள் அனைவருமே பின்லேடன்கள்தான் என்று கூறியுள்ளனர்.
பின்லேடன் மரணம் குறித்து காந்தஹாரில் ஒருவர் கூறுகையில், இந்த செய்தி என்னை மேலும் பலமாக்கியுள்ளது. அல் கொய்தாவின் நம்பர் ஒன் தியாகி ஒசாமா பின்லேடன்தான். உலகெங்கிலும் உள்ள முஸ்லீ்ம்களுக்கு அவர் மட்டுமே இனி ஹீரோவாக திகழ்வார் என்றார்.
இன்னொருவரோ, பின்லேடன் மறைவுச் செய்தி பெரிதல்ல. அவர் உருவாக்கிய அல் கொய்தா மிகப் பெரிய இயக்கமாக மாறியுள்ளது. உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அது நீடிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications