பின்லேடன் வேட்டை குறித்து பாக்.குக்கு தெரியாமல் ரகசியம் காத்த அமெரிக்கா
வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தப் போகும் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அரசுக்கு ஒரு தகவல் கூடத் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்துள்ளது அமெரிக்கா என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அரசுக்குத் தகவல் தெரிவித்தால், அது எந்த ரூபத்திலாவது பின்லேடனுக்குப் போய் அவர் தப்பி விடலாம் என்ற அச்சத்தால், பாகிஸ்தான் அரசுக்கு கடைசி வரை தகவலே தெரிவிக்காமல் ரகசியம் காத்துள்ளது அமெரிக்கா.
லேடன் சுட்டு வீழ்த்தப்பட்டு அது உறுதியாகும் வரை அதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்கவே இல்லையாம் அமெரிக்கா.
இதுகுறித்து அமெரிக்க அரசுத் தரப்பில் கூறுகையில், பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டுடனும், பின்லேடன் வேட்டை குறித்த தகவலை அமெரிக்கா பகிர்ந்து கொள்ளவில்லை. தகவல் லீக் ஆகி விடும் என்பதால்தான் ரகசியம் காத்தோம்.
இதுபோன்ற நடவடிக்கைகளின்போது மிக மிக சிலருக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்படுவது வழக்கம். எனவே இது இயல்புக்கு மாறானதல்ல.
40 நிமிடங்களே இந்த தாக்குதல் நீடித்தது. இதில் 2 அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. தாக்குதலில் பின்லேடன் தவிர 3 ஆண்களும், ஒரு பெண்ணும் கொல்லப்பட்டனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக ஒரு ஹெலிகாப்டர் பழுதடைந்து சேதமடைந்தது. இருப்பினும் இந்த நடவடிக்கையில் எந்த அமெரிக்க வீரரும் காயமடையவில்லை, உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்தபோது ஒசாமாவின் வீடருகே பாகிஸ்தான் உளவுப் பிரிவினரும் இருந்ததாகவும் அவர்கள் அமெரிக்கப் படையினருக்கு உதவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications