அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது! - மின் வாரிய தலைவர் சி.பி.சிங்
கோவை: அடுத்த 2 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மின்பற்றாக்குறையே இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சி.பி. சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
மின்வெட்டு பிரச்சினையை கண்டித்து கோவையில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் மற்றும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் உள்ள தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சி.பி.சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்கான கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமாநாத் முன்னிலை வகித்தார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சி.பி.சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சிபி சிங் கூறியதாவது:
காற்றாலை மின் உற்பத்தியை மின்வாரியம் வாங்குவதில்லை என்று கூறுவதில் உள்ள நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும். காற்றாலைகள் மூலம் தற்போது ஒரே நாளில் ஒரு சீரான மின் உற்பத்தி இல்லாததால் அது சாத்தியமில்லாத நிலை உள்ளது. வருகிற 15-ந்தேதிக்கு பிறகு காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. அவ்வாறு வாங்கப்படும் மின்சாரம் 2 மாதத்துக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டு தான் வாங்கப்படுகிறது. ஆகவே அந்த மின்சாரத்தை திடீரென நிறுத்திவிட முடியாது. ஆகவே தொலை நோக்கு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் இன்னும் 2 ஆண்டுகளில் மின்பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் மின்பற்றாக்குறையை பொறுத்தவரை தமிழ்நாடு மட்டும் இல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் கூடுதலாகவும், சென்னையை தவிர கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் குறைவாகவும் மின்வினியோகம் செய்யப்படுகிறது என்றும், ஆகவே தமிழ்நாடு முழுவதும் சீரான மின்வினியோகம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்தியா முழுவதும் குறிப்பாக மும்பை, புனே போன்ற நகரங்களிலும் சென்னையை போன்றுதான் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆகவே இதை சரி? தவறு என்று சொல்ல முடியாது.
நாடு முழுவதும் சூழ்நிலை இப்படித்தான் உள்ளது என்று விளக்குகிறேன். சிறப்பு பொருளாதார மண்டலங்களை பொறுத்தவரை 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவதற்கு ஏற்கனவே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆகவே அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
6 துணை மின்நிலையங்கள்:
மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆரல்வாய்மொழி, கயத்தார், உடுமலை, தேனி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின் உற்பத்தியை வாங்கி வினியோகம் செய்வதற்கு ரூ.4 ஆயிரம்கோடி செலவில் 400 கே.வி திறன் கொண்ட 6 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இது 2 அல்லது 3 ஆண்டுகளில் செயல்பட தொடங்கும்.
ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான வரி என்பது புதிதாக போடப்பட்டது அல்ல. ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்பாடு உள்ளதால் வரிச்சுமை உள்ளது போன்று தெரிகிறது. ஆனால் இதை நாங்கள் அமல்படுத்துவது இல்லை.
தற்போது தொழில் அமைப்புகள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். தற்போதைய மின் திட்டங்கள் குறித்து நிலமையை அவர்களிடம் எடுத்து கூறி உள்ளோம். எனவே இந்த சூழ்நிலையில் வேலைநிறுத்தம் தேவையா என அவர்கள் முடிவு செய்ய வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications