எந்த மோசமான விளைவையும் சந்திக்கத் தயார்-கனிமொழி

இந்த வழக்குத் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய கனிமொழிமொழி நேற்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: சிபிஐ நீதிமன்றம் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?
கனிமொழி: நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். நீழதிமன்றம் எடுக்கும் எந்த முடிவையும் நான் மதித்து நடப்பேன். நிரபராதி என்பதை நிருபித்து வெளியே வருவேன். நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் யூகித்துக் கூற முடியாது. நமது நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நான் இந்த விவகாரத்தில் இருந்து மீண்டு வருவேன் என நம்புகிறேன்.
கேள்வி: நீங்கள் பெண் என்பதால் உங்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
கனிமொழி: நான் எப்போதும் ஆணும், பெண்ணும் சமம் என கருதுபவள். எனவே பெண் என்பதற்காக எந்தச் சலுகையையும் காட்டக்கூடாது எனக் கருதுகிறேன்.
கேள்வி: நீதிமன்ற விசாரணையின்போது கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
கனிமொழி: இதுவரை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை.
கேள்வி: இந்த விவகாரத்தில் உங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லை எனக் கருதுகிறீர்களா?
கனிமொழி: அப்படி இல்லை. நாங்கள் எந்த அரசியல் கட்சியின் ஆதரவையும் கோரவில்லை. நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வாழ்க்கை நாங்கள் சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்.
கேள்வி: டெல்லியில் உங்களுக்கு ஆதரவாக யார் யார் இருக்கிறார்கள்?, இந்த விவகாரம் காரணமாக உங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா?
கனிமொழி: எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. என்னுடன் எனது தாயார், சகோதரர் மற்றும் நண்பர்கள் உள்ளனர். எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை. கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித் தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம்.
கேள்வி: குற்றப்பத்திரிகை விவகாரத்தால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா?
கனிமொழி: இந்த விவகாரம் தொடர்பாக கட்சி மட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரை இதில் எந்தப் பிரிவினையையும் நான் பார்க்கவில்லை.
கேள்வி: இந்த விவகாரத்தை கட்சிக்குப் பின்னடைவாகக் கருதுகிறீர்களா?
கனிமொழி: இதுபோன்ற ஏராளமான சோதனைகளை திமுக சந்தித்துள்ளது. சோதனைகளைச் சந்தித்து மீண்டு வந்திருக்கிறோம்.
கேள்வி: நீதிமன்ற முடிவு என்னவாக இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?
கனிமொழி: யூகத்தின் அடிப்படையில் கருத்து கூற நான் ஊடகம் கிடையாது.
கேள்வி: கைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா?
கனிமொழி: சட்டம் என்ன விரும்புகிறது, சிபிஐ என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம். இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக் கொள்வேன்.
கேள்வி: குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா?
கனிமொழி: கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் போய்விட மாட்டோம்
கேள்வி: எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும்?
கனிமொழி: இந்த பிரச்சனையில் எதையும் நான் கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது.
கேள்வி: உங்களை மட்டும் அனைவரும் குறி வைப்பதாக கருதுகிறீர்களா?
கனிமொழி: இந்த விவகாரத்தில் தாக்கலான குற்றப் பத்திரிக்கையில் எத்தனையோ பெயர்கள் உள்ளன. ஆனால், என் மீது மட்டும் ஏன் இவ்வளவு தூரம் குறி வைக்கப்படுகிறது என்று புரியவில்லை. அதே நேரத்தில் எந்த மோசமான விளைவையும் சந்திக்க நான் தயார்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.












Click it and Unblock the Notifications