அடிகளாசிரியருக்கு 'தொல்காப்பியர்' விருது-ஜார்ஜ் ஹார்ட்க்கு 'குறள்பீட' விருது: ஜனாதிபதி வழங்கினார்
டெல்லி: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட பின் தமிழ் அறிஞர்களுக்கு முதல் முறையாக மத்திய அரசு விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இந்த விருதுகளை வழங்கினார்.
தமிழ் மொழியை, செம்மொழி என்று பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதுவரை சமஸ்கிருதம், பாலி, ப்ராக்ருதம், அராபிக், பாரசீகம் ஆகிய மொழி அறிஞர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
2005-06, 2006-07 மற்றும் 2007-08ம் ஆண்டுகளுக்கான தமிழ் அறிஞர்கள் விருது வழங்கும் விழா, டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. தலா ரூ.5 லட்சம் சிறப்பு பரிசுடன் தொல்காப்பியர் விருது, குறள்பீட விருதுகளும், தலா ரூ.1 லட்சம் சிறப்பு பரிசுடன் இளம் அறிஞர் விருதுகளும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் விருதுகளை வழங்கினார். மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் விழாவில் பங்கேற்றார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 102 வயதான பேராசிரியர் அடிகளாசிரியர், தொல்காப்பியர் விருதும் (2005-06), அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் குறள்பீட விருதும் (2006-07) பெற்றனர்.
ஆர்.அரவிந்தன் (விழுப்புரம்), ஒய்.மணிகண்டன் (தஞ்சை), எஸ்.கலைமகள் (தஞ்சை), வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் (ராமநாதபுரம்), கே.பழனிவேலு (புதுவை), எஸ்.சந்திரா (மதுரை), அரங்க.பாரி (அரியலூர்), மு.இளங்கோவன் (அரியலூர்), எம்.பவானி (திருவாரூர்), ஆர்.கலைவாணி (நாகை), ஏ.செல்வராசு, பி.வேல்முருகன், ஏ.மணவழகன், எஸ்.சந்திரசேகரன், சிமோன் ஜான் ஆகிய 15 பேர் இளம் அறிஞர்கள் விருதைப் பெற்றனர்.
மேலும் வட மொழிகளைச் சேர்ந்த 51 அறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications