டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன்: முதலிடம் பிடித்த கே.ரேகா
ஒசூர்: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், ஓசூர் மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார்.
ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்
தமிழ் 195, ஆங்கிலம் 196, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் தலா 200.
ரேகாவின் தந்தை கேசவன். தனியார் நிறுவன அதிகாரி. தாய் மலர்விழி ஆவலப்பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறார். ரேகாவன் தங்கை கிருத்திகா. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர்கள் ஒசூர்-பாகலூர் ரோட்டில் வசித்து வருகின்றனர்.
ரேகா பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 479 மதிப்பெண்கள் பெற்று ஒசூர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்திருந்தார். தற்போது மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ரேகாவின் ஆசிரியர்களும், உறவினர்களும் அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்தினர். அவரது தோழிகள் சந்தோஷத்தில் அவரைத் தோழில் வைத்து பள்ளியைச் சுற்றி வந்தனர்.
மாணவி ரேகா நிருபர்களிடம் கூறியதாவது,
நான் கவனமாகப் படித்தேன். எனக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் என அனைவரும் ஊக்கம் அளித்தனர். மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்துள்ளதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நானும் மற்ற மாணவிகளைப் போல் தான் படித்தேன். பாடங்களை நன்றாகப் புரிந்து கொண்டு படித்ததால் தான் என்னால் இந்த சாதனையை படைக்க முடிந்தது.
நான் மருத்துவம் படித்து ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வேன்.
நான் மாநிலத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைக்கவே இல்லை. எனக்கு உதவிய அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications