பாமக முக்கிய நிர்வாகிகள் இருவர் கட்சிக்கு முழுக்கு
திண்டிவனம்: பாமகவில் சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் மரியாதை இல்லை. அதனால் அக்கட்சியில் இருந்து விலகுகிறோம் என்று பாட்டாளி தொழிற்சங்க தலைவரும், அக்கட்சியின் துணை தலைவரும் அறிவித்துள்ளனர்.
பாமகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகின்றது பாட்டாளி தொழிற்சங்கம். இதன் பொதுச் செயலாளராக இருப்பவர் ஏ. ஞானசேகரன். அவர் பாமகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதே போன்று பாமக மாநில துணை தலைவராக இருப்பவர் அப்துல் அஜீஸ். அவரும் பாமகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ஞானசேகரன், அப்துல் அஜீஸ் ஆகிய இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேடைதோறும் சமூக நீதி, சமநீதி, ஜனநாயக மரபு பற்றி பேசி வருகின்றார். ஆனால் பாமக -வில் அது போன்ற எதுவும் இல்லை.
பாமக பாட்டாளிகளுக்கான கட்சி என்று நம்பிச் சென்றோம். ஆனால் அது பணக்காரர்கள் கட்சியாக உள்ளது.
அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திக்க கூட முடியவில்லை. சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் அங்கு எந்த மரியாதையும் இல்லை.
பாமக பொதுச் செயலாளர், பொருளாளர் என்று பதவிகள் கொடுத்தாலும் அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, பாமகவில் இருந்து உழைப்பது வீண் என்று கருதி அக்கட்சியில் இருந்து வெளியேறுகிறோம்.
எங்களைப் போன்று பாமகவில் பல நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களும் விரைவில் பாமகவில் இருந்து வெளியேறுவது உறுதி என்றனர்.












Click it and Unblock the Notifications