ஸ்பெக்ட்ரம் ஊழல்-எஸ்ஸார் சிஇஓவிடம் சிபிஐ விசாரணை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எஸ்ஸார் குழும தலைமை செயலதிகாரி பிரஷாந்த் ரூயாவிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தவிருப்பது இது 2வது முறையாகும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்ந்து பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரூயாவிடம் 2வது முறையாக சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
தற்போதைய விசாரணையின்போது எஸ்ஸார் நிறுவனத்துக்கும், லூப் டெலிகாமுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கேட்கப்படவுள்ளது.
இந்திய சட்டத் திட்டப்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இன்னொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 10 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் இருக்கக் கூடாது. ஆனால் இந்த விதிமுறையை மீறி நடந்துள்ளது. வோடோபோன் நிறுவனத்தின் செல் போன் சேவைக்காக கூட்டு சேர்ந்துள்ள எஸ்ஸார் நிறுவனம், லூப் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வைத்துள்ளது.
ஆனால் 2ஜி உரிமம் பெற்ற சமயத்தில் தங்களுக்கு லூப் டெலிகாம் நிறுவனத்தில் வெறும் 2.15 சதவீத பங்குகளே இருந்ததாகவும், பின்னர் இது 1.5 சதவீதமாக குறைந்ததாகவும் கூறுகிறது எஸ்ஸார்.
ராசா தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் லூப் டெலிகாம் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications