பாதாள சாக்கடைக்கென வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள்-கவுன்சிலர்கள்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மக்களிடம் வசூலித்த டெபாசிட் தொகையை வட்டியுடன் திரும்ப கொடுக்க வேண்டும் என, நகராட்சிக் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கவுன்சில் கூட்டம்
பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. கவுன்சிலில், உள்ளூர் திட்டக்குழு கூட்டத்தில் 30 தீர்மானங்களும், சாதாரண கூட்டத்தில் 49 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பஸ் ஸ்டாண்டின் இழிநிலை
கூட்டம் துவங்கியது முதலே கவுன்சிலர்கள் காரசாரமான கேள்விகளை எழுப்பத்துவங்கினர். பஸ் ஸ்டாண்ட் சுரங்க நடைபாதையில் மழை பெய்யும் போது, தண்ணீரும், மண் கழிவுகளும் தேங்கி விடுவதால் சேறும் சகதியுமாகி விடுகிறது. மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சுரங்கநடைபாதை அருகில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது.
போக்குவரத்து போலீசாரும் நகராட்சி அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதில்லை. மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், நடைபாதை கடைகளுக்கு இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். ஓட்டல்களில் சுகாதாரம் மோசமான நிலையில் உள்ளது என கவுன்சிலர்கள் பலரும் கேள்விகள் எழுப்பினர்.
குடிநீர் பிரச்சனை
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி மற்றும் நகராட்சிக்கு ஆழியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. நகராட்சிக்கு வரும் குடிநீரின் தன்மை மாறுபட்டு சப்பையாக உள்ளது. நகராட்சிக்கு பயன்படாத வாகனங்கள் வெங்கடேசா காலனி வாட்டர் டேங்க் வளாகத்தில் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விற்று, புதிய வாகனங்கள் வாங்க வேண்டும்.
பணத்தை திருப்பிக்கொடுங்கள்
பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்ட்து. இந்நிலையில், திட்டம் வாபஸ் பெறப்பட்டதால், மக்களிடம் வசூலித்த டெபாசிட் தொகை வட்டியோடு திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா கேட்டுக்கொண்டார்.











Click it and Unblock the Notifications