செஞ்சி தொகுதியில் முரசு சின்னத்திற்குப் பதில் 'கூடை'க்கு நிறைய ஓட்டு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில், தேமுதிகவின் முரசு சின்னத்தைப் போலவே சுயேச்சை வேட்பாளரின் கூடைச் சின்னம் இருந்ததால் குழப்பமடைந்த வாக்காளர்கள் சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டுக்களைப் போட்டதால் தேமுதிக வேட்பாளருக்கு ஓட்டு குறைந்து அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.
செஞ்சி தொகுதியில் பாமக சார்பில் கணேஷ்குமாரும், தேமுதிக சார்பில் சிவலிங்கமும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சிவலிங்கம், வெறும் 1811 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
இவரது தோல்விக்கு சுயேச்சை வேட்பாளர் சிவக்குமார்தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
முரசு சின்னமும், சிவக்குமாருக்கு ஒதுக்கப்பட்ட கூடைச் சின்னமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளது. இதனால் குழப்பமடைந்த வாக்காளர்கள் முரசுக்குப் பதில் கூடைக்கு வாக்களித்து விட்டனர்.
இதனால் சிவக்குமாருக்கு சம்பந்தமே இல்லாமல் 8627 வாக்குகள் கிடைத்து விட்டன. விளைவு, தேமுதிக வேட்பாளர் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.
இதை விட காமெடி ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை ஒருவரின் பெயர் எம்.விஜயகாந்த். இவர்தான் கேப்டன் என்று நினைத்து பலர் அவருக்கு ஓட்டளித்துள்ளனர். சின்னத்தைக் கூட பார்க்காமல் பெயரைப் பார்த்து வாக்களித்து விட்டனர். இதனால் இந்த சுயேச்சைக்கு 7355 வாக்குகள் கிடைத்து அவருக்கு 3வது இடமும் கிடைத்து விட்டது.
இதன் மூலம் இந்த எம்.விஜயகாந்த்துக்கு தொகுதியில் புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications