24 புதுமுககங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு-ஜெயலலிதா அதிரடி
சென்னை: பழைய அமைச்சர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்காமல் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் முதல்வர் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா.
தன்னையும் சேர்த்து 34 பேரைக் கொண்ட அமைச்சரவைப் பட்டியலை நேற்று ஜெயலலிதா வெளியிட்டார்.
ஜெயலலிதா தவிர்த்து உள்ள 33 அமைச்சர்களில் 9 பேர் மட்டுமே பழைய முகங்கள் ஆகும். மற்ற 24 பேரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பழையவர்களை விட புதியவர்களையே அதிகம் நியமிப்பது ஜெயலலிதா ஸ்டைல். எம்.எல்.ஏக்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, புதியவர்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து ஊக்குவிப்பார் ஜெயலலிதா.
அந்த வகையில் இந்த முறையும் அவரது அமைச்சரவை முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது.
ஜெயக்குமார், வளர்மதிக்கு இடமில்லை
பழைய முகங்கள் என்று பார்த்தால் ஓ.பி.பன்னீர்செல்வம், கேஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விஸ்வநாதன், சண்முக வேலு, ஆர்.வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், எஸ்.வி.சண்முகநாதன், எம்.சி.சம்பத், சி.கருப்பசாமி ஆகியோர்தான் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் ராசி எண் 9 என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயக்குமார், பா. வளர்மதி ஆகிய பழைய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல நயினார் நாகேந்திரன் போன்ற சீனியர்களுக்கும் இடம் தரப்படவில்லை.
24 புதுமுகங்கள்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பி.பழனியப்பன், செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, கே.டி.பச்சமால், வி.செந்தில் பாலாஜி, எஸ்.வி. வேலுமணி, டி.கே.எம்.சின்னையா, இசக்கி சுப்பையா, ஜி.செந்தமிழன், கோகுலஇந்திரா, ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.வி.உதயகுமார், என்.சுப்பிரமணியன், என்.மரியம் பிச்சை, புத்தி சந்திரன், எஸ்.டி.செல்லப்பாண்டியன், டாக்டர் வி.எஸ்.விஜய், என்.ஆர். சிவபதி, ஜெயபால், கே.பி. முனுசாமி, கே.வி.ராமலிங்கம் ஆகிய புதுமுகங்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
சபாநாயகரை வீழ்த்தியவர் சட்ட அமைச்சர்
கடந்த திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பனை அம்பாசமுத்திரத்தில் வீழ்த்திய இசக்கி சுப்பையாவுக்கு சட்ட அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
கரூரில் வென்ற செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்துத் துறையைக் கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் வென்ற கோகுல இந்திராவுக்கு பதவி கிடைத்துள்ளது. இவர் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்லூர் ராஜு அமைச்சர்
மதுரை மேற்குத் தொகுதியைச் சேர்ந்த செல்லூர் ராஜுக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அதேபோல சேவல் சின்னத்திலிருந்து அதிமுகவில் ஜெயித்து வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இந்த முறை அமைச்சர் பதவி கொடுத்துக் கெளரவித்துள்ளார் ஜெயலலிதா.
சைதாப்பேட்டையில் வென்றவரான செந்தமிழன் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராகியுள்ளார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இடம்
கலசப்பாக்கத்தில் வென்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் முதல் முறையாக அமைச்சராகிறார்.
புதிய அமைச்சர்களில் பி.வி.ரமணா திருவள்ளூரில் வென்றவர்.
தாம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற சின்னையாவும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.
ஞானசேகரனை வீழ்த்தியவருக்கு அமைச்சர் பதவி
வேலூர் தொகுதியில் காங்கிரஸ் ஜாம்பவான் ஞானசேகரனை வீழ்த்தி வெற்றி பெற்ற டாக்டர் வி.எஸ். விஜய்க்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அவருக்கு சுகாதாரத்துறை என்ற முக்கியமான துறையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
அமைச்சராகியுள்ள தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவராவார்.
ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றவரான கே.வி.ராமலிங்கத்திற்கு பொதுப் பணித்துறை என்ற மிக முக்கியமான துறையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
உதகமண்டலம் தொகுதியில் வென்றவரான புத்தி சந்திரனுக்கும் அமைச்சர் பதவி அதிர்ஷ்டம் கை கூடி வந்துள்ளது.
இன்னொரு புதுமுக அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதிக்குப் பக்கத்துத் தொகுதியான திருச்சி மேற்கிலிருந்து வென்றவரான மரியம் பிச்சைகும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
கந்தர்வக்கோட்டையிலிருந்து வென்றவரான என்.சுப்பிரமணியனும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.
முசிறி தொகுதியில் வென்ற என்.ஆர்.சிவபதியும் அமைச்சராகியுள்ளார்.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள செல்வி ராமஜெயம், புவனகிரி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர் ஆர்.பி.உதயக்குமார். சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவரான உதயக்குமார் இப்போது முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.
தூத்துக்குடியில் வென்றவரான செல்லப்பாண்டியனுக்கும் அமைசச்ர் பதவி கிடைத்துள்ளது.
சங்கரன் கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றவரான கருப்பசாமியும் முதல்முறையாக அமைச்சராகியுள்ளார்.
கடைக்கோடி கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பச்சமால். இவரும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்ற பி. பழனியப்பனும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.
3 பெண்கள்
ஜெயலலிதா அமைச்சரவையில் அவரையும் சேர்த்து மொத்தம் 3 பெண்களுக்கு இடம் தரப்பட்டுள்ளது.
கோகுல இந்திரா மற்றும் செல்வி ராமஜெயம் ஆகியோர் அந்த அமைச்சர்கள்.
இதுவரை இல்லாத பெரிய அமைச்சரவை
இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அமைச்சரவையை அமைத்துள்ளார் ஜெயலலிதா. இதுவரை தமிழகத்தில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications