ஜனாதிபதி முன் கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று அணிவகுப்பு
டெல்லி: தனது அரசை காப்பாற்றிக் கொள்ளவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா இன்று 121 எம்எல்ஏக்களுடன் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்திக்கவுள்ளார்.
கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர மத்திய அரசுக்கு பிரந்துரை செய்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து எதியூரப்பா கூறுகையில்,
நான் எனது அரசைக் காப்பாற்ற இங்கு வந்துள்ளேன். ஆளுநர் பரத்வாஜை திரும்பப் பெறுமாறு வலியுறுத்த உள்ளோம். எனக்கு எதிராகத் திரும்பிய எம்.எல்.ஏக்களை பாஜகவுடன் சேர வைத்த ஆளுநருக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தனது ஆதவாளர்களுடன் நேற்று மாலை 3 சிறப்பு விமானங்களில் டெல்லிக்கு சென்றார் எதியூரப்பா.
இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் நேற்று கர்நாடகா ஆளுநரைத் திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர். அப்போது கர்நாடகாவில் அரசியல் அமைப்புக்கு எதிராக எதுவும் நடக்காது என்று பிரதமர் உறுதியளித்தார்.
பரத்வாஜ் அனுப்பியுள்ள அறிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
அவசரப்பட்டு மாநில அரசைக் கலைத்தால் அது அரசியல் மட்டும் சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிதானமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரில் பாஜக-காங் பேராட்டம், போக்குவரத்து பாதிப்பு:
இந் நிலையில் ஆளுநருக்கு எதிராக பாஜக தலைவர்களும், ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களும் பெங்களூரில் இன்று பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருவதால் நகரில் ஆங்காங்கே போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்ககப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்திய பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியுடன் ஹைதராபாத் விமான நிலையத்தில் எம்எல்ஏ கைது:
இதற்கிடையே கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நேற்றிரவு கைது செய்யப்பட்டார். எதியூரப்பாவுடன் சென்று கர்நாடக அரசுக்கு மெஜாரிட்டி பலம் உள்ளதை நிரூபிக்க அவர் டெல்லி செல்லும் வழியில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications