மெரீனா கடற்கரையில் 5 வயது சிறுமி மாயம்: பெற்றோர் கண்ணீர்
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் 5 வயது சிறுமி காணாமல் போனாள். காணாமல் போய் ஒரு வாரம் ஆகியும் இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். அவரது மனைவி ஹசீனா. அவர்களுக்கு தம்மன்னா, ரிகாத் என்னும் 5 வயது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
சையது நூர் அகமது கடந்த 11-ம் தேதி தனது குடும்பத்துடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார். அங்கே பஞ்சு மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமி திடீர் என்று மாயமானாள்.
மகளைக் காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கடற்கரை முழுவதும் தேடினர். ஆனாலும் பலனில்லை. இதையடுத்து
அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிறுமி தம்மன்னா காணாமல் போய் ஒரு வாரமாகிவிட்டது. ஆயினும் இதுவரை சிறுமி பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
சிறுமி தம்மன்னா எல்.கே.ஜி. படித்தாள். அவளுக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம், இந்தி தான் தெரியும்.
தம்மன்னாவின் பெற்றோர் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 11-ம் தேதி நாங்கள் மெரீனா கடற்கரைக்கு சென்றோம். அங்கு சிறுமி தம்மன்னாவும், சிறுவன் ரிகாத்தும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் பஞ்சு மிட்டாய் கேட்டதால் காசு கொடுத்து வாங்கி வருமாறு அனுப்பி வைத்தோம்.
சற்று தொலைவில் இருந்த பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் இருவரும் சென்று வாங்கினார்கள். ஆனால் காசு குறைவாக இருந்ததால் சிறுவன் ரிகாத் எங்களிடம் காசு வாங்க வந்தான். திரும்பிச் சென்று பார்க்கையில் தம்மன்னா அங்கு இல்லை என்றான். நாங்கள் உடனே பதறியடித்து சிறுமியைத் தேடினோம். பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் கேட்டதற்கு தான் கவனிக்கவில்லை என்று கூறிவிட்டார்.
என் மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறு போலீசாரைக் கேட்டுக் கொள்கிறோம். சிறுமி குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் பொது மக்கள் 8056104888 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications