ஆமை வேகத்தில் திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணி: பயணிகள் அவதி
திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் ரூ. 360 லட்சம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பரில் ஆரம்பித்தது மாநகராட்சி நிர்வாகம். முதல் கட்டமாக ஒரு பகுதி மட்டும் மூடப்பட்டது. வேலை துவங்கி ஆறு மாத காலம் ஆகியும் இன்னும் ஒரு தளம் அமைக்கும் பணிகள் மட்டுமே ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் சில நாட்களாக அந்தப் பணியும் நிறுத்தப்பட்டது. இந்தப் பணியால் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்களை புதிய பேருந்து நிலையத்திலும், டவுன் பஸ்களை நான்கு இடங்களில் ரோட்டோரத்திலேயே தற்காலிக ஸ்டாப் அமைக்கப்பட்டும் நிறுத்தப்படுகிறது.
வசதி இல்லாத பஸ் ஸ்டாப்புள்
தற்காலிக பஸ் ஸ்டாப்புகளால் பயணிகளுக்கு சிரமப்படுகின்றனர். எங்கு எந்த ரூட்டுக்கான பஸ்கள் நிறுத்தப்படுகின்றன போன்ற தகவல்கள் பயணிகளுக்கு சரிவரக் கிடைப்பதும் இல்லை. நிழற்குடை வசதி இல்லாமல் இந்த அக்னி நட்சத்திர வெயிலில் அவதிப்படுகின்றனர். முக்கியமான ரோடுகள், நெரிசல் நிறைந்த பகுதிகளில் தற்காலிக பஸ் ஸ்டாப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணி துவங்கி நான்கு மாதத்துக்கு மேலாகியும் ஒரு பகுதி பணி கூட நிறைவடையாமல் உள்ளது. ஒரு பகுதி பணி முடிவடையவே ஆறு மாதத்துக்கு மேலாகிவிடும் என்கின்றனர். மறுபகுதி பணி முடிவடைய மேலும் ஆறு மாதத்துக்கு மேல் ஆகும்.
ஆமை வேகப் பணியும் நிறுத்தம்
மிகவும் மெல்லமாக நடைபெற்று வந்த பணியும் சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பஸ் ஸ்டாண்டில் சில நாட்களாக அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து முடிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பஸ் ஏறுவதற்கு பல பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. எந்தப் பகுதிக்குச் செல்ல எப்படி செல்வது என்று தெரியாமல் அவதிப்பட வேண்டியுள்ளது. பேருந்துக்காக மணிக் கணக்கில் கால்கடுக்க வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. பஸ் ஸ்டாண்டை விட்டு பஸ்கள் வெளியேற பல கிலோ மீட்டர் தூரம் குறுகிய நோடுகளில் சுற்றி வர வேண்டியிருப்பதால், நகரை விட்டு பஸ்கள் வெளியே செல்லவே பல மணி நேரம் தாமதம் ஆவதுடன் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர் மக்கள். திருப்பூருக்கு வரும் பயணிகளுக்கு ஏற்படும் அவஸ்தையை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.