மதுரையில் ரூ. 1000 கோடி நில மோசடி கும்பல் கைது: எஸ்.பி. அஸ்ரா கார்க் அதரடி
மதுரை: மதுரையில் ரூ. 1000 கோடி மதிப்புள்ள சுமார் 153 ஏக்கர் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தவர்களில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரை ஆனையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பார்க் டவுன், கலைநகர், பசுபதி நகர், கார்த்திக் நகர், பாலாஜிநகர், வாசுநகர், அதிசயா நகர், ஜெய்நகர் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 153 ஏக்கர் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் அந்த நிலங்களை சிலர் மோசடி செய்துள்ளனர்.
அந்த நபர்கள் சம்பந்தப்பட்ட நிலங்களுக்கு தொடர்ந்து வில்லங்கத்தை ஏற்படுத்திக் கொண்டும், அதை சரி செய்து கொடுப்பதாகவும் கூறி நில உரிமையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்தனர்.
இது குறித்து பார்க் டவுன் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கணேசன் புகார் அளித்தார். அந்த புகார் மீது விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீஸ் விசாரணையில் சென்னை சாந்தோமைச் சேர்ந்த ஜான்கென்னடி, மதுரை எஸ். ஆலங்குளத்தைச் சேர்ந்த துரைராஜ், ராமன், ராஜ செல்வராஜ், ராஜ விஜயசிங், ராஜ தாமோதரன், ராஜ கண்ணபிரான், ராஜ செல்வேந்திரன், கார்மேகம், ஜெயலட்சுமி, அவருடைய மகன் முரளிதர மோகன கிருஷ்ணா, பரவை காளியம்மன் கோவில் தெரு ராஜபூமிநாதன், வலம்புரிநாதன், மதுரை பைபாஸ் ரோடு அலுவலக இணை சார்பதிவாளர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜான்கென்னடி என்பவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 153 ஏக்கர் நிலங்கள் தங்களது மூதாதையர்களின் வழிவகை சொத்துக்கள் என்றும், அதற்கு தாங்கள் தான் வாரிசுகள் எனவும் கூறி, அவர்கள் போலி ஆவணங்களை பெற்று இருக்கிறார்கள். இதன் தற்போதைய மதிப்பு ரூ. 1000 கோடி இருக்கும்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்களில் கார்மேகம், ராஜ தாமோதரன், ராஜ கண்ணபிரான், ராஜ செல்வேந்திரன், ராஜ பூமிநாதன் வலம்புரிநாதன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications