தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சி தள்ளிவைப்பு
தஞ்சை: தஞ்சையில் இன்று (மே 18ம் தேதி) நடக்கும் என்று எதிர்பார்த்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சோழ மாமன்னன் இராஜராஜன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் அது திகழ்கிறது.
அதே தஞ்சையில் மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. அது முள்ளிவாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாகவும், ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 தியாகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது.
இராஜராஜன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே இரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
50 டன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகின்றனர்.
இதில், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழகத்திலும், உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஓவிய மண்டபம் ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு இங்கு வைக்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லுமளவிற்கு இது உருவாக்கப்பட்டு வருகிறது.
பல லட்சம் ஈழத் தமிழர்களின் துயரங்களை புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தஞ்சையில் உருவாகிவரும் முள்ளிவாய்க்கால் நினைவக வேலைகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
எனவே, இந்த வேலைகள் முழுமையாக முடிந்த பின்னரே திறப்பு விழாவும், உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ம் ஆண்டு நிறைவு விழாவும் நடைபெறும். இதற்கான தேதி பின்பு அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications