வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை-சென்னையில் இரவில் பலத்த மழை
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
தென் தமிழ்நாடு, சத்தீஷ்கார், ஆந்திரா மாநிலத்தையொட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதிகள் சிலவற்றிலும், வடக்கு கடலோர பகுதிகளில் ஒன்றிரண்டு இடங்களிலும் இடியோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று-இடியுடன் கன மழை
தமிழகத்தில் நேற்று தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மதுரையில் மழை கொட்டித் தீர்த்து விட்டது.
சென்னையில் இரவில் உலுக்கிய இடி - மழை
தலைநகர் சென்னையில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை மற்றும் பலத்த காற்று, இடியால் மக்கள் பீதியடையும் அளவுக்கு இருந்தது. புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இந்த திடீர் கோடை மழை காரணமாக சென்னையில் நிலவி வந்த வெயிலின் தாக்கம் சற்று குறைநதுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் மாலையில் கடல் காற்று சீக்கிரமாகவே வீசி வருவதால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று இது மேலும் குறைந்துள்ளது.
மழைக்கு ஒதுங்கிய 2 பெண்கள் பலி
இதற்கிடையே, வேலூர் அருகே மழைக்கு ஒதுங்கி நின்ற இரண்டு பெண்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. இதில் நகரின் பல பகுதிகளில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன.
இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் காலமானார். அவருடைய இறுதி ஊர்வலம் மாலை நேரத்தில் நடந்தது. அப்போது மழையும் பெய்தது.
இறுதிச் சடங்குக்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மழை அதிகமாக பெய்ததால் அருகில் இருந்த மேல் நிலைப் பள்ளிச் சுற்றுச்சுவர் அருகே நின்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.
இதில் கண்ணன் என்பவரது மனைவி பூந்தாய் (56), லட்சுமணன் என்பவரது மனைவி லட்சுமி (50) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.
சுவர் இடிந்த சம்பவம் குறித்து பொதுப் பணித்துறை உரிய விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்கவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications