27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்
சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு குறையும் வகையில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் 3 மணி நேர மின்வெட்டும் சென்னையில் 1 மணி நேர மின்வெட்டும் நிலவி வருவதாகவும் இதை ரத்து செய்ய தேவையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறியிருந்தார்.
மின்வெட்டை போக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் இருமுறை விவாதித்தார்.
மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பற்றாக்குறை மின்சாரத்தை உற்பத்தி செய்ய எடுத்து வரும் நட வடிக்கைகளை அப்போது முதல்வரிடம் விளக்கி கூறினார்.
உடனே ஜெயலலிதா தமிழ்நாட்டில் 3 மாதத்திற்குள் மின் சப்ளை சீராக வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதையொட்டி மின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.
இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகிறது. 3 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது காற்றாலை மூலம் காலையில் 840 மெகாவாட் மின்சாரமும், மாலையில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் கிடைக்கிறது.
சராசரியாக 1,800 மெகாவாட் மின்சாரம் தினமும் கிடைக்கிறது. 27-ந் தேதிக்கு பிறகு மேலும் மின் உற்பத்தி அதிகரித்து விடும்.
எனவே 27-ந்தேதிக்கு பிறகு மின்வெட்டு குறைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் 3 மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும். சென்னையிலும் மின்வெட்டு குறைய வாய்ப்புள்ளது," என்றார்.
மேலும் மே இறுதிக்குப் பிறகு கோடை மழை பெய்யத் தொடங்கிவிடும் என்பதால் மின் உற்பத்தி மேலும் சீராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications