கோவை மாவட்டத்தில் குற்றங்கள் குறைக்கப்படும்: புதிய எஸ்.பி. உமா உறுதி
கோவை: கோவை மாவட்டத்தில் குற்றங்கள் குறைக்கப்படும் என நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.பி. உமா தெரிவித்தார்.
புதிய எஸ்.பி.
கோவை மாவட்ட எஸ்.பி.-ஆக இருந்த கண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் உமா நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
உமா, கடந்த 1999-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சியில் பணியை துவக்கினார். பின்னர் தஞ்சை, தாராபுரம் பகுதிகளில் டி.எஸ்.பி. ஆகவும், நெல்லை மாநகரில் ஏ.டி.எஸ்.பி.ஆகவும், கோவை மாநகர துணை கமிஷனராகவும் (தலைமையகம்), சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.
இரண்டாவது பெண் எஸ்.பி.
இவர் கோவை மாவட்டத்தில் பணியாற்றும் இரண்டாவது பெண் எஸ்.பி. ஆவார்.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து உமா கூறியதாவது,
இன்னும் சில நாட்களில் மாவட்டத்தில் உள்ள 33 காவல் நிலையங்களிலும், சப் - டிவிஷன் டி.எஸ்.பி. அலுவலகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குற்றங்கள் குறைக்கப்படும். ரூரல் காவல் நிலையங்களில் போலீஸ் பற்றாக்குறை உள்ளது. இவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
சூலூர் சப்-டிவிஷன்
சூலூர் சப்-டிவிஷனை மீண்டும் துவக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பினைக் கருத்தில் கொண்டு, சூலூர் சப்-டிவிஷனை விரைவில் துவக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications