காரில் வைத்து அதிகாரி எரித்துக் கொலை-டிரைவர் கைது-3 பேருக்கு வலை
சென்னை: ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை அடித்துக்கொலை செய்து விட்டு பின்னர் உடலை காரில் வைத்து தீவைத்து எரித்த வழக்கில் கார் டிரைவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்ட 3 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
60 வயதான மாசிலாமணி, குடிசை மாற்று வாரியத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின்னர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
அவரிடம் டிரைவராக இருந்தவர் சுரேஷ். இவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் மாசிலாமணியிடம் பணியில் சேர்ந்தார். சிலநாட்களுக்கு முன்பு சுரேஷுடன் காரில் சென்ற மாசிலாமணியைக் காணவில்லை. சுரேஷையும் காணவில்லை. இந்த நிலையில் கிண்டி தொழிற்பேட்டைப் பகுதியில் மாசிலாமணியின் கார் எரிந்த நிலையிலும், அதில் மாசிலாமணியின் கருகிப் போன உடலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுரேஷ்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்தது. இதையடுத்து அவரைத் தேடி வந்தனர். இதில் அவர் திருச்செந்தூர் அருகே உள்ள தனது சொந்த ஊரான பேயன்விளையில்வைத்து போலீஸாரிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது உண்மையைக் கக்கினார் சுரேஷ். இதுகுறித்து சுரேஷ் போலீஸாரிடம் கூறுகையில்,மாசிலாமணி கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் எப்போதும் பெரும் பணத்துடன் இருப்பார்.
காரில் பணத்துடன் எப்போதும் செல்வதால் அதைப் பார்த்த நான் பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்டேன். இதை எனது கூட்டாளிகள் 3 பேரிடம் சொன்னேன். அவர்களும் சம்மதித்தனர்.
சம்பவத்தன்று காரில் சென்ற போது வழியில் எனது கூட்டாளிகளை ஏற்றிக் கொண்டேன். காரில் ஏறிக் கொண்ட மூன்று பேரும் மாசிலாமணியிடம் பணத்தைப் பறிக்க முயன்றனர். ஆனால் அன்று பார்த்து அவர் பணத்தைக் கொண்டு வரவில்லை. இதையடுத்து வீட்டில் இருக்கும் பணத்தைக் கேட்டு மிரட்டி சரமாரியாக அடித்தோம். அதில் மாசிலாமணி இறந்து விட்டார்.
இதையடுத்தி கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் காரை கொண்டு வந்து நிறுத்தி அதற்கு தீவைத்து விட்டுத்தப்பி விட்டோம் என்று கூறியுள்ளார் சுரேஷ்.
சுரேஷின் கூட்டாளிகள் மூன்று பேரையும் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications