ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு: எரிமலை சாம்பல் பரவியதால் 252 விமானங்கள் ரத்து
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து எரிமலை வெடித்து, அதன் சாம்பல் காற்றில் அடர்த்தியாக பரவியதால் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து பகுதிகளில் பறக்கும் 252 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஐஸ்லாந்தில் கடந்த ஆண்டு ஒரு எரிமலை வெடித்தது நினைவிருக்கலாம். அதன் சாம்பல் காற்றில் பரவியதில் விமான என்ஜினுக்குள் சாம்பல் புகுந்து விமான விபத்து ஏற்படும் என்பதால் ஒரு லட்சம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு கோடி விமானப் பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். இதனால் விமானப் போக்குவரத்து தொழில் பெரும் பாதிப்பை அடைந்தது. விமான கம்பெனிகளுக்கு 170 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது.
சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இதே போன்ற எரிமலை வெடிப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தில் உள்ள கிரிம்ஸ்வோட்டின் என்ற எரிமலை இப்போது வெடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எரிமலை வெடிப்பு இது என்று அந்த நாட்டின் அதிபர் ஓலாபர் கிரிம்சன் தெரிவித்துள்ளார்.
இந்த எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு பரவி வருகிறது. இதனால் விமானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் 252 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த தகவலை ஐரோப்பிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் பிரையன் பிளைன் தெரிவித்தார்.
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எரிமலை சாம்பல் காற்றில் கலந்ததால் தன் பயணத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரான்சிலும் பாதிப்பு
எரிமலை சாம்பல் காற்றில் கலந்து அந்த காற்று பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளை நோக்கி முன்னேறி வருகிறது. இதனால் அந்த நாடுகளிலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளிலும் இந்த காற்று பரவும் என்று தெரிகிறது.
ஐஸ்லாந்து நாட்டின் முக்கிய சர்வசேத விமான நிலையமான கெப்ளாவிக் விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. ஐஸ்லாந்து முழுவதும் எரிமலை சாம்பல் துகள்கள் பரவியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications