சிறையில் கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு: டாடா நிறுவனத்திலிருந்து விலகிய திமுக பிரமுகர்கள்
டெல்லி: திகார் சிறையில் உள்ள திமுக எம்பியும் தனது தங்கையுமான கனிமொழியை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று மாலை சந்தித்தார்.
இந்த சந்திப்பு 5.15 முதல் 6 மணி வரை நடந்தது. அப்போது மத்திய இணையமைச்சர் நெப்போலியனும் உடனிருந்தார்.
கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் டெல்லி வந்துள்ளார்.
இதற்கிடையே கனிமொழியிடம் விசாரணை நடத்த அனுமதிக்ககுமாறு அமலாக்கப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாடா நிறுவனத்திலிருந்து விலகிய திமுக பிரமுகர்கள்:
இதற்கிடையே டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவன இயக்குனர் குழுவிலிருந்து திமுக அமைப்புச் செயலாளரான பெ.வீ.கல்யாணசுந்தரம் விலகியுள்ளார்.
தி.மு.கவைச் கல்யாணசுந்தரம், வி.ஆர்.எஸ்.சம்பத்தும் 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவன இயக்குனர்களாக அரசால் நியமிக்கப்பட்டனர்.
இந் நிலையில் அவர்களது நியமனத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடந்த மாதம் 7ம் தேதி டாடா நிறுவனத்துக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை கடிதம் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதே போல சம்பத்தும் விலகிவிட்டதாகத் தெரிகிறது. இந்த இருவருமே வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தார்த் பெகுரா ஜாமீன் மனு-தீர்ப்பு ஜூன் 3க்கு ஒத்திவைப்பு:
இதற்கிடையே 2ஜி முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஜூன் 3ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications