தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அரசுக்கு சிபிஎம் கோரிக்கை
மதுரை: சட்டத்தை மதிக்காமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் வெவ்வேறு விதமான கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
கட்டண உயர்வை கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்ய கடந்த 2009-ம் ஆண்டு தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வரப்படடது.
இதற்காக நீதியரசர் கோவிந்தராசன் தலைமையில் அமைந்த ஆணையம் கொடுத்த பரிந்துரையின்படி 2010-2011 கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளும் கல்விக் கட்டணங்களை வசூலித்துக் கெள்ளலாம் என அரசு ஆணையிட்டது. ஆனால் அதை மீறி பெரும்பாலான பள்ளிகள் தங்கள் விருப்பப்படி கட்டணங்களை வசூல் செய்தன.
சில பள்ளிகள் ரசீது இல்லாமலும், மறைமுகமாகவும், நன்கொடை வாயிலாகவும் பல வழிகளில் கல்விக் கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி செயல்பட்டன.
இதன் காரணமாக தமிழகமெங்கும் பெற்றோர்களும், மாணவர்களும் கட்டணக் கொள்ளையைத் தடுக்கக் கோரி தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற ஆணையின்படி, நீதியரசர் கோவிந்தராசன் பரிந்துரைத்த கட்டண விகிதங்களை மறுபரிசீலனை செய்யக் கோரி சுமார் 6 ஆயிரத்து 500 பள்ளிகள் மனு அளித்தன.
இந்தச் சூழலில், கடந்த ஆண்டு இறுதியில் நீதியரசர் கோவிந்தராசன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நீதியரசர் ரவிராஜபாண்டியன் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து 6 ஆயிரத்து 500 பள்ளிகளின் கோரிக்கை அவரால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, அடுத்த கல்வியாண்டு (2011-2012) துவங்க உள்ளதால் புதிய பரிந்துரைகள் ஏதும் வெளிவராத நிலையில், நீதியரசர் கோவிந்தராசன் பரிந்துரைத்த கட்டணங்கள் மட்டுமே கண்டிப்பாக பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும்.
ஆனால் தமிழகமெங்கும் தனியார் பள்ளிகள் மீண்டும் தங்கள் விருப்பத்திற்கு கல்விக் கட்டணங்களை வசூல் செய்து வருகின்றன.
இதனால் பல இடங்களில் பெற்றோர்களும், மாணவர்களும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சட்டத்தை அமலாக்கவும், சட்டப்படியான கல்விக் கட்டணங்கள் வசூலாவதை ஒழுங்குபடுத்தவும் வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும், நீதியரசர் ரவிராஜபாண்டியனின் பரிந்துரைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது என்று அதில் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications