2ஜி ஊழல்-ஜூன் 7ல் நாடாளுமன்ற குழு முன் சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்புத் துறை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் குற்றம் சாட்டினார்.
இதையடுத்தே மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவியை ராஜிநாமா செய்ய நேர்ந்தது. இதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் சூடு பிடித்து, ராசா, கனிமொழி உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், அதிகபட்சமாக ரூ. 30,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ராசாவைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபில் கூறியிருந்தார்.
இதையடுத்து பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்கு குழு, வினோத் ராயை நேரில் அழைத்து விசாரித்தது. அப்போது ராய், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் நாட்டுக்கு எப்படி ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து விளக்கினார்.
இந் நிலையில் இதே விவகாரம் குறித்து விசாரித்து வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் வினோத் ராயை நேற்று நேரில் அழைத்து விசாரித்தது.
அப்போது ராய் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நான் கண்டறிந்துள்ளது குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழ வேண்டிய அவசியமில்லை. ஆதாரத்தின் அடிப்படையில்தான் இழப்புத் தொகையை எனது அறிக்கையில் பதிவு செய்துள்ளேன்.
எனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது தொலைத்தொடர்பு விதிமுறையை சரியாகப் பின்பற்றாததும், அதனால் நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் உண்மைதான் என்றார்.
இதையடுத்து பாஜக ஆட்சி நடந்த 1998ம் ஆண்டு முதல் 2009ம் வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு ராயிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுக் கொண்டது.
ராய் விளக்கம் அளித்த பின் நிருபர்களிடம் பேசிய நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ, எப்படி அவர் ரூ. 1.76 லட்சம் கோடி என்ற கணக்குக்கு வந்தார் என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசின் கொள்கைகள் என்ன என்பதை சிஏஜி என்ற முறையில் கருத்தில் கொண்டு தான் இந்தக் கணக்குக்கு வந்தாரா என்பது குறித்தும் ராயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் தனது பதில்களை அளித்தார் என்றார்.
இந்தக் குழுவின் முன் வரும் ஜூன் 7ம் தேதி சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங்கும், 8ம் தேதி மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை வாரியம் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளும் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications