போலீசாக நடித்து நகைப்பட்டறையில் 1 கிலோ தங்கத்தை திருடியவர்களில் 3 பேர் கைது
கோவை: போலீசார் போல நடித்து நகைப்பட்டறை ஊழியர்களை தாக்கி 1 கிலோ தங்கத்தை திருடிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 271 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாக நடித்து கொள்ளை
கோவை வைசியாள் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் நகை பட்டறை நடத்தி வருபவர் திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. சம்பவத்தன்று இரவு பட்டறையில் கிருஷ்ணமூர்த்தியின் தம்பி தினேஷ்குமார் உள்ளிட்ட ஊழியர்கள் 6 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4.45 மணியளவில் அறையின் கதவு தட்டப்பட்டுள்ளது. 'போலீஸ் வந்திருக்கிறோம், கதவை திறங்கடா" என மிரட்டும் தொனியில் குரல் கேட்டது. பயந்துபோன ஊழியர்கள் கதவை திறந்தனர். போலீசார் அணியும் ஷூ, போலீசாரைப் போலவே அட்டாக் கட்டிங் சிகை அலங்காரம் ஆகியவை வந்தவர்கள் மஃப்டி போலீசார் என நம்பும்படி இருந்தது. வந்தவர்கள் தங்களை சென்னை க்ரைம் பிராஞ்ச் போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின்னர், “கிருஷ்ணமூர்த்தி எங்கே?; கொள்ளையடித்த நகைகளை எங்கே ஒளித்து வைத்துள்ளீர்கள்?" என கேட்டவாறே ஊழியர்களை கடுமையாகத் தாக்கினர். தினேஷ்குமார் மற்றும் ஊழியர்களை ஒரு அறையில் தள்ளி கட்டிப்போட்டனர். பின்னர், அங்கிருந்த நகைகள் மற்றும் நகை செய்வதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
சந்தேகம்
மேற்படி கொள்ளை சம்பவத்தை துணை ஆணையர் காமினி மேற்பார்வையில் உதவி ஆணையர் முருகசாமி, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியாரைக் கொண்ட தனிப்படை விசாரித்து வந்தது. விசாரணையில் கடையில் ஊழியர்களாகப் பணியாற்றி வந்த பாபு, மணிகண்டன் ஆகியோர் மீது சந்தேகம் வலுத்தது. தீவிர விசாரணையில் அவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் பட்டறையில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே இதைப் போல போலீசார் எனக்கூறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது
இதைத் தொடர்ந்து செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி, பாபு, மணிகண்டன் ஆகியோரை காவல்துறை கைது செய்தது. அவர்களிடமிருந்து 271 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இக்குற்ற செயலில் ஈடுபட்ட இன்னும் நால்வரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.












Click it and Unblock the Notifications