அதிமுக அரசை பாராட்டும் தீர்மானம்-அனுமதிக்க சென்னை மேயர் மறுப்பு
சென்னை: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசை பாராட்டி சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை மேயர் சுப்பிரமணியம் ஏற்க மறுத்துவிட்டார்.
இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் தேவி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் எழுந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவை பாராட்டுவது தொடர்பாக தாங்கள் கொடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
அதற்கு பதிலளித்த திமுகவைச் சேர்ந்த மேயர் மா.சுப்பிரமணியன், நீங்கள் தீர்மானத்தை நேற்றுதான் கொடுத்தீர்கள். குறைந்தது 8 நாட்களுக்கு முன்பு கொடுத்திருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் கொடுக்கும் தீர்மானம் அவசியமானதா, நிறைவேற்ற வேண்டுமா, வேண்டாமா என்பது மேயரின் முடிவு.
இப்போதைக்கு உங்களது தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்ற இயலாது என்றார்.
அப்போது பேசிய மீனா , தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இது அரசை பாராட்டும் தீர்மானம். எனவே இதை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
ஆனால் மேயர் சுப்பிரமணியம், உங்கள் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த மன்றத்தில் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்றார்.
தொடர்ந்து பேசிய தேவி, தமிழ்நாட்டில் புதிய அரசு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தல் வெற்றிக்குகூட மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு தீர்மானம் கொண்டு வந்திருந்தோம். ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டுவர அனுமதித்து இருக்க வேண்டும். புதிய அரசை வாழ்த்த மேயருக்கு மனமில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சுப்பிரமணி எழுந்து, முதல்வர் ஜெயலலிதா, விஜயகாந்த், தா.பாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. இம்மன்றத்தின் மூலம் புதிய ஆட்சியைப் பாராட்டுகிறேன். புதிய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை 2 நாட்களுக்கு முன்பு கொடுத்தேன். அதை ஏற்கவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றார்.
அடுத்துப் பேசிய தேமுதிக கவுன்சிலர் சரவணன், முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கும் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள விஜயகாந்துக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications