ஸ்ரீரங்கம் கோயில் முன்னாள் அறங்காவலர்-திமுக து.செ. கஞ்சா வழக்கில் கைது!
திருச்சி: திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும் ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான குடிமுருட்டி சேகர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், நேற்று இரவு சேகர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது போலீசார் காரை மடக்கி விசாரணை செய்தனர். அவரின் காரை பரிசோதனை செய்ய முயன்றனர். ஆனால், இதற்கு குடமுருட்டி சேகர் எதிர்ப்பு தெரிவித்ததார். இருப்பினும் போலீசார் அவரது காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா இருந்தது.
மேலும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததுள்ளார். இதனால் இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் குடிமுருட்டி சேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.
திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட முயற்சி-நேரு:
இந் நிலையில் திருச்சி மாநகர செயல்வீரர்கள் கூட்டம், திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு,
ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இந்த ஆட்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரின் மீதும் பொய் வழக்குகள் போடுவார்கள். திமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் போடுவது குறித்து தமிழக போலீசார்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.
அதில் முதல் கட்டமாக திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடமுருட்டி சேகரை வெளியே கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் செய்வோம். இதற்காக யாரும் பயந்து விடாதீர்கள்.
கடந்த தேர்தலில் என்னிடம் ரூ. 7 கோடி பணமும், 5 ஆயிரம் ஏக்கர் நிலமும், திருச்சி தில்லை நகரில் 63 வீடுகள் எனக்கு சொந்தமாக இருக்கிறது என்று மொட்ட கடிதாசியாக அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்ததன. இது உண்மை இல்லை, மக்கள் நம்ப மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் நமது கட்சியில் உள்ளவர்கள் கூட, இவரிடம் அவ்வளவு இருக்குமோ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அது தான் நான் தோல்வி அடைந்ததற்குக் காரணம். ஆகவே வீண் வதந்திகளை நம் கட்சிக்காரர்களே பரப்ப வேண்டாம்.
திருச்சியில் இடைத்தேர்தல் வர இருப்பதால், இனி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மீது ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்வார்கள். நாம் அத்தனையையும் நீதிமன்றத்தின் மூலம் உண்மையில்லை என்று நிரூபித்து வெளியே வருவோம். அதையும் மீறி திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு கடுமையாக உழைத்து, வெற்றி பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications