உங்க காசு எனக்கு வேண்டாம், நீங்கள் கொடுத்ததே போதும்-விஜய்காந்த்
விழுப்புரம்: ரிஷிவந்தியம் தொகுதியில் நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் பணத்தில், ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டேன். எனக்கு நீங்கள் கொடுத்ததே போதும் என்று தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த இரு நாட்களாக தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று காலை அவர் தொகுதியில் சாங்கியம், மணலூர்பேட்டை, கள்ளிப்பாடி, திருவரங்கம், பிரம்மகுண்டம் உள்ளிட்ட 37 கிராமங்களில் திறந்த வேனில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இரவு 12 மணி வரை கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்தார்.
இன்று காலை வடபொன்பரப்பியில் துவங்கி, வடகீரனுர், மேல்சிறுவளுர், மணலூர், பவுஞ்சிப்பட்டு, புளியங்கோட்டை, லக்கி நாயக்கன்பட்டி, ரங்கப்பனூர், புதுப்பட்டு, புதுப்பேட்டை, ராவுத்த நல்லூர், பா.புதூர், கடுவனூர் ஆகிய கிராமங்களில் நன்றி தெரிவித்தார்.
ஆங்காங்கே பொது மக்களிடையே பேசிய விஜய்காந்த், என்னை தேர்ந்தெடுத்த உங்களுக்கும், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. உங்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். அதற்கு குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும்.
ரிஷிவந்தியம் தொகுதியில் கரும்பு விவசாயிகள் அதிகம் உள்ளனர். அவர்கள் பாம்பு கடித்து பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடிக்கு மருந்துகள் இருக்க ஏற்பாடு செய்வேன்.
கடந்த 15 ஆண்டுகாலமாக இந்த தொகுதியில் சரியான சாலை வசதி இல்லை. கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இங்கு வந்து பார்த்தார்களா என்றே தெரியவில்லை. 5 ஆண்டு காலத்தில் இந்த தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர பாடுபடுவேன்.
ஒரு கட்சியின் தலைவர் என்பதால், என்னால் அடிக்கடி இங்கு வர முடியவில்லை என்றாலும் கூட, உங்களின் தேவைகளை அறிந்து கடமையாற்றுவேன். நான் இங்கு வருவதில்லை என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்வார்கள். இவர்கள் 15 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து என்ன செய்தார்கள்.
இந்தத் தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற, அரசு ஒதுக்கும் பணத்தில் ஒரு நயா பைசாவைக் கூட நான் எடுக்க மாட்டேன். எனக்கு நீங்கள் கொடுத்ததே போதும் என்றார்.
நான் இங்கு வருவதில்லை என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்வார்கள் என்று விஜய்காந்த்தே சொல்வதைப் பார்த்தால், அந்தப் பக்கம் அவர் மிக அரிதாகவே எட்டிப் பார்ப்பார் போலிருக்கிறது.












Click it and Unblock the Notifications