நாளை உண்ணாவிரத்தை துவக்குகிறார் ராம்தேவ்-தடுக்க மத்திய அரசு தீவிரம்!

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க அவசர சட்டம் இயற்ற வேண்டும், பறிமுதல் செய்யப்படும் பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும், ஊழல்வாதிகள் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும், இந்தக் கோரிக்கைகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கும் நிறைவேற்ற வேண்டும் என்ற அதிரடி கோரிக்கைகளை வைத்துள்ளார் ராம்தேவ்.
இதனால் மத்திய அரசு முழி பிதுங்கி நிற்கிறது. இந் நிலையில் நாளை காலை 7 மணிக்கு அவர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது உண்ணாவிரதத்தைத் துவக்கவுள்ளார். அவருடன் 5 லட்சம் பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரேவும் பங்கேற்கவுள்ளார்.
அன்னா ஹஸாரே ஏப்ரலில் உண்ணாவிரதம் இருந்தபோது நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக எழுச்சி ஏற்பட்டது. இதையடுத்து ஊழலுக்கு எதிரான லோர்பால் மசோதாவைத் திருத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டு அதற்கான குழுவில் ஹசாரேவையும் சேர்த்தது.
இப்போதும் அதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு ஆழ்ந்துள்ளது. இதையடுத்து ராம்தேவின் உண்ணாவிரதத்தைத் தவிர்க்க மத்திய அரசு தீவிர முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் பாபா ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 4 அமைச்சர்கள் டெல்லி விமான நிலையத்துக்கே வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னரும், உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை என ராம்தேவ் அறிவித்தார். இதையடுத்து நேற்றும் அவருடன் அரசுத் தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே ராம்தேவின் போராட்டத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்சும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவரது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார் ராம்தேவ். இதற்காக 2 நாட்களுக்கு முன்பே ராம்தேவ் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனிலிருந்து டெல்லி வந்து விட்டார்.
தனது போராட்டம் குறித்து ராம்தேவ் கூறுகையில், எனது கோரிக்கைகளை நான் ஏற்கனவே அரசிடம் கூறி விட்டேன். ஒருசில விவகாரங்களைத் தவிர மற்ற அனைத்திலும் நமக்கும், அரசுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இனி நான் மக்களிடம் பேசப் போகிறேன் என்றார்.
ராம்தேவுடன் இன்றும் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை:
இந் நிலையில் ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடச் செய்ய மத்திய அரசு இன்று மீண்டும் அவரிடம் பேச்சுவார்த்தையை நடத்தியது. டெல்லியில் அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்குச் சென்ற மத்திய அமைச்சர்கள் கபில்சிபல் மற்றும் சுபோத்காந்த் சஹாய் ஆகியோர் அவரிடம் நெடு நேரம் பேச்சு நடத்தினர்.
கறுப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய சட்டத்தின் வரைவு அறிக்கையை ராம்தேவிடம், அமைச்சர்கள் வழங்கியதாகத் தெரிகிறது.
முன்னதாக ராம்தேவை சந்திக்கும் முன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடன் கபில் சிபல் பேச்சு நடத்தினார். தேவைப்பட்டால் பாபாவை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் பிரணாப் முகர்ஜி கொல்கத்தா செல்லும் முடிவை ரத்து செய்துவிட்டார். அதே போல சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மங்களூர் செல்லும் திட்டத்தையும் ரத்து செய்துவிட்டார்.
ஒருசில விவகாரங்களைத் தவிர மற்ற அனைத்திலும் நமக்கும், அரசுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்று ராம்தேவ் கூறியுள்ளதை தனக்கு சாதமானதாகக் கருதும் மத்திய அரசு, அவரிடம் மேலும் பேச்சு நடத்தினால் அவர் போராட்டத்தை கைவிட வாய்ப்புள்ளதாக நினைத்ததாகத் தெரிகிறது.
ஆனால், இன்றைய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் ராம்தேவ் திட்டமிட்டபடி தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்குவார் என்றே தெரிகிறது. ராம்தேவின் இந்த முடிவைத் தொடர்ந்து கபில் சிபல் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரதமருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதத்தை வாபஸ் பெறச் செய்ய இரவிலும் அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
ராம்தேவ் மீது திக்விஜய் மீண்டும் தாக்கு:
இந் நிலையில் ராம்தேவ் மீது காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இன்றும் கடும் தாக்குதல் தொடுத்தார். அவர் கூறுகையி்ல், கறுப்புப் பணத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போகும் ராம்தேவ் மீதே அது தொடர்பான புகார்கள் உள்ளன. இதனால் முதலில் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க வேண்டும்.
அவரது பணம், அவருக்கு பணம் வரும் வழிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ராம்தேவ், சன்யாசி அல்ல, ஒரு பிஸினஸ் மேன். சன்யாசி என்பவன் தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்குத் தருபவன். இவர் அப்படி ஏதும் யாருக்கும் உதவியதாக நான் கேள்விப்பட இல்லை என்றார்.
இளங்கோவனும்..:
இந் நிலையில் சேலத்தில் நிருபர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ராம்தேவ் அறிவித்துள்ளார். பணம் சம்பாதிப்பது மட்டும் தான் அவரது குறிக்கோள். அவர் தனி விமானம் வைத்து கொண்டு பறந்து கொண்டிருக்கிறார்.
நிறைய பணம் வைத்திருப்பவர்களை மட்டுமே அருகில் வைத்து கொள்வார். பணம் இல்லாதவர்களை வெளியில் தள்ளிவிடும் சுபாவத்தை கொண்ட அவர் லஞ்சத்தை ஒழிக்க போவதாக கூறுவது எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications