ராம்தேவ் விரட்டப்பட்ட விவகாரம்-ஜனாதிபதியிடம் பாஜக புகார்

அத்வானி தலைமையிலான பாஜக மூத்த தலைவர்கள் குழு ராஜ்காட்டில் நடத்தி வந்த சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக் கொண்டு குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இன்று பிற்பகலில் சென்றனர். அங்கு குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர்அத்வானி செய்தியாளர்களிடம் பேசுகையில், சுதந்திர இந்தியாவில் மிகவும் மோசமான ஊழல் அரசு என்ற பெயரை இந்த அரசு பெற்றுள்ளது. உடனடியாக நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்டி தற்போது எழுந்துள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க வகை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரை நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டோம்.
மேலும் ஊழல் தொடர்பான பிரச்சினைகளைக் கவனிக்க கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம் என்றார் அத்வானி.
முன்னதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி தலைமையில் டெல்லி, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிட வளாகத்தில் பாஜகவினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடந்தது. இரவு முழுவதும் அத்வானி, கத்காரி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும், நூற்றுக்கணக்கான பாஜகவினரும் இதில் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்தியாவின் காட்மதர் என்று கூறப்படும் இந்திரா காந்தியையே எதிர்த்துப் போராடி வென்ற இயக்கம் பாஜக என்பதை காங்கிரஸ் மறந்து விடக் கூடாது.
இதை பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்திரா காந்திக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்துக் கொடுத்ததை அவர்கள் மறந்து விடக் கூடாது. இவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒட்டுமொத்த நாடும் கோபத்துடன் உள்ளது. போராட்ட மனோபாவத்தில் மக்கள் உள்ளனர்.
பாபா ராம்தேவ் போன்ற ஊழலை எதிர்த்துப் போராடுவோர் மீது இந்த அரசு பிரயோகித்து வரும் வன்முறை, அராஜகத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்த அரசு பதவியில் நீடிக்கும் அருகதையை இழந்து விட்டது.
அதேசமயம், பிரிவினையைத் தூண்டி வரும், நாட்டுக்கு எதிராக பேசி வரும் சையத் அலி ஷா கிலானி போன்றோரை தொடர்ந்து சுதந்திரமாக பேச விட்டு வருகிறது இந்த அரசு என்றார் பிரசாத்.












Click it and Unblock the Notifications