ஜந்தர்மந்தரில் அனுமதி மறுப்பு-உண்ணாவிரதத்தை ராஜ்காட்டுக்கு மாற்றினார் ஹஸாரே
டெல்லி: ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டதால், உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டுக்கு மாற்றியுள்ளது அன்னா ஹஸாரே குழு.
தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை, மாற்றவும் முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது அன்னா ஹஸாரே குழு.
ராம்தேவ் வெளியேற்றத்தைக் கண்டித்து டெல்லியில் ஜூன் 8ம் தேதி அதாவது நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஹஸாரே அறிவித்துள்ளார். இதையடுத்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அங்கு 144 தடை உத்தரவை போலீஸார் அமல்படுத்தியுள்ளனர். இதையடுத்து தற்போது போராட்டத்தை ராஜ்காட்டுக்கு ஹஸாரே குழுவினர் மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஜந்தர் மந்தர் பகுதியில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது சட்டவிரோதமானது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி எங்களது போராட்டத்தைத் தடுக்க முயலுகின்றனர்.
இருந்தாலம் எங்களது போராட்டத்தில் மாற்றம் இல்லை. ராஜ்காட்டில் நாங்கள் உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறினார்.
இதற்கிடையே, அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு இடம் கொடுக்காமல் டெல்லி நிர்வாகம் இழுத்தடிப்பதை அரவிந்த் கேஜ்ரிவால் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்னா ஹஸாரேவால் நாட்டுக்கு என்ன பாதிப்பு வந்து விடும் என்பதை அரசு விளக்க வேண்டும்.
அன்னாவுக்கு 73 வயதாகிறது. அவர் யாரையும் எப்போதும் வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டதில்லை. வன்முறை அவரது வரலாற்றிலேயே கிடையாது. இப்போது அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க அவர் முயலுகிறார். ஆனால் அதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். போலீஸார் எங்களைத் தடுக்க முயன்றால் நாங்கள் அதைத் தடுக்க மாட்டோம். எங்களைக் கைது செய்ய அனுமதிப்போம் என்றார் அவர்.
நாளை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் ஹஸாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications