ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் பான் கி மூன் போட்டி!

பான் கி மூனின் செயல்பாடுகள் குறிப்பாக இலங்கை இனப்படுகொலை தொடர்பாக அவர் காட்டிய மெத்தனம், அலட்சியம், கண்டுகொள்ளாமை உலகத் தமிழர்கள் மனதில் நீங்காத வலியாக, வடுவாக மாறிப் போயுள்ளது. குறித்த காலத்தில் உரிய முறையில் தலையிட்டு, வலுவான முறையில் செயல்படாமல் காலம் தாழ்த்தியதால் பல ஆயிரம் அப்பாவித் தமிழர்களின் அகோர பலிக்கு மறைமுகமாக மூனும் ஒரு காரணமாகி விட்டார்.
இலங்கைக்கு எதிராக உறுதியான ஒரு நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. மாறாக, இலங்கை விவகாரத்தில் கண் மூடி வாய் பொத்தி காது கேட்தாவர் போல அமைதியாக இருந்து விட்டார் மூன்.
அவர் செய்த ஒரே ஒரு உருப்படியான வேலை, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் உள்ளிட்டவை குறித்த விசாரிக்க நிபுணர் குழு அமைத்ததும், அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டதும் மட்டுமே.
இந்த நிலையில், மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் மூன். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு 2வது முறையாக எனது பெயரைப் பரிசீலிக்குமாறு ஐ.நா. பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்..
இந்த மாபெரும் அமைப்பின் தலைமைப் பதவியை வகிப்பது கெளரவத்துக்குரியது, பெருமைக்குரியது. உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு கொடுத்தால் 2வது முறையாக இந்தப் பதவியை என்னால் வகிக்க முடியும். எனது பொதுச் செயலாளர் பதவிக்காலத்தில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இடையே சிறந்த ஒற்றுமைப் பாலமாக நான் விளங்கியுள்ளேன் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார் மூன்.












Click it and Unblock the Notifications